'நாம் தமிழர்' பொதுச் செயலாளராக கயல்விழி நியமனம் தாமதம்? இன்றைய பொதுக் குழு திடீர் ஒத்திவைப்பு!
சென்னை: நாம் தமிழர் கட்சி முன்னர் அறிவித்திருந்த அக்கட்சியின் இன்றைய பொதுக் குழு கூட்டம் மழை, வெள்ள பாதிப்பால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் பதவி வகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியில் 2-ம் கட்ட பதவிகளாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பலரே நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறினர் அல்லது நீக்கப்பட்டனர்.

நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் தடா சந்திரசேகரன். சில மாதங்களுக்கு முன்னர் தடா சந்திரசேகரன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் புதிய பொதுச்செயலாளர் யார் என அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியின் மேடைகளில் தற்போது சீமானின் மனைவி கயல்விழி பங்கேற்று வருகிறார். பொதுச் செயலாளராக இருந்த தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வில் அவர் பங்கேற்றார்; பின்னர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கயல்விழி தலைமையில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து நாம் தமிழர் கட்சியில் கயல்விழி முன்னிறுத்தப்படுவதால் அக்கட்சியின் புதிய பொதுச்செயலாளராக கயல்விழி நியமிக்கபடக் கூடும் எனவும் கூறப்பட்டது. இதனை சீமான் தரப்பும் மறுக்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழு இன்று கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பொதுக் குழுவில் நாம் தமிழர் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கயல்விழி நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் இன்றைய பொதுக் குழு கூட்டம் மழை. வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழுவுக்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது. எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் தமது வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications