சீமானுக்கு இதே வேலை.. இறந்தவர் வரமாட்டார் என்பதால் சொல்லாததை சொல்கிறார் - விளாசிய செல்வப்பெருந்தகை
திருமகன் ஈவேரா நாம் தமிழர் கட்சியில் இணைவதற்கு விரும்பினார் என சீமான் பேசியதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை: சமீபத்தில் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா நாம் தமிழர் கட்சியில் இணைவதற்கு விரும்பினார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த இவர், கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த தொகுதியை காலியானதாக அறிவித்தது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு.. கடலுக்குள் கருணாநிதி பேனா சின்னம் வைத்தால் உடைப்பேன்- சீமான்
ஈவிகேஎஸ் இளங்கோவன்
இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.
சீமான் பேச்சு
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நிலவி வரும் உள்கட்சி குழப்பங்களால் இடைத்தேர்தலில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. அதே நேரம் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டு உள்ளார். இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வரும் சீமான், திருமகன் ஈவேரா நாம் தமிழர் கட்சியில் இணைய விரும்பியதாக தெரிவித்து உள்ளார்.
செல்வப்பெருந்தகை அறிக்கை
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள செல்வப்பெருந்தகை, "கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்து, மக்களுக்கு சேவையாற்றி மறைந்த திரு.திருமகன் ஈவெரா அவர்கள் என்னுடைய நட்பு வட்டாரங்களில் மிகவும் முக்கியமானவர். என்னுடைய உற்ற நண்பர் என்பது தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
சீமான் பற்றி திருமகன் ஈவேரா பேசியதில்லை
அவர் என்னிடம் அனைத்து விஷயங்களையும் பரிமாறிக்கொள்வார். ஆனால். ஒருபோதும் திரு.சீமான் அவர்களைப் பற்றியோ, அவரது கட்சியை பற்றியோ என்னிடம் கூறியதில்லை. திரு.சீமான் அவர்கள் ஒரு காலத்தில் பெரியாரிய கொள்கையில், சிந்தனையிலிருந்த போது திருமகன் ஈவெரா அவர்களை சந்தித்து இருக்கலாம். நட்பு ரீதியாக பழகியிருக்கலாம். ஆனால், அவரது கட்சியில் இணைவது பற்றி கண்டிப்பாக ஒருபோதும் பேசியிருக்கமாட்டார்.
சீமானின் அபாண்ட பழி
மேலும், அவருடைய தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் எதுவும் செய்யவில்லை என்று போகிற போக்கில் அபாண்டமாக பழி சுமத்தியிருக்கிறார் சீமான். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் திரு.திருமகன் ஈவேரா அவர்களை பற்றி கேட்டால் அவரின் உயர்வான தன்மை குறித்து திரு.சீமான் அவர்களால் விளங்கிக் கொள்ளமுடியும்.
இறந்தவர்கள் பற்றி பேசுபவர் சீமான்
ஆனால், சீமான் அவ்வாறெல்லாம் செய்யக்கூடிய அறிவாளி அல்ல. எப்போதும் சீமான் இறந்து போனவர்கள் பற்றியும், அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதனால் இதுபோன்ற கருத்துக்களை கூறிவருவதே இவரது வாடிக்கையாகிவிட்டது. இதுதான் இவரின் லட்சணம். இதே போன்று சீமானின் பொறுப்பற்ற பேச்சுக்கள் குறித்து சமூக ஊடகங்களால் எவ்வளவு விமர்சிக்கப்பட்டாலும் அவர் தன்னை திருத்திக்கொள்ளமாட்டார்.
ஊடக வெளிச்சத்துக்காக
இதற்கு பின்பும் மறைந்தவர்களை குறித்து உண்மைக்கு புறம்பாக அவர்கள் சொல்லாத செய்திகளை பேசாமல் இருக்கவேண்டும். ஊடக வெளிச்சத்திற்காகவும், தன்னை முன்னிலை படுத்துவதற்காகவும், இது போன்ற கருத்துக்களை கூறி வரும் சீமான் அவர்களுக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.