ஆல் தி பெஸ்ட் விஜயதாரணி! எங்கிருந்தாலும் வாழ்க! "நம்பிக்கையுடன்" வாழ்த்திய செல்வப்பெருந்தகை
சென்னை: விஜயதாரணி எடுத்த முடிவு துரதிருஷ்டவசமானது. அவர் எங்கிருந்தாலும் வாழ்க என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது: விஜயதாரணி எங்கிருந்தாலும் வாழ்க. ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, விஜயதாரணி மீது கருணை வைத்து 3 முறை சட்டசபை உறுப்பினராக்கினார்.

காங்கிரஸ் கட்சி விஜயதாரணிக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. அவர் கட்சி பணியாற்றவில்லை என்றாலும் அவரை பெருமையுடன் நடத்தினோம். ஆனால் இந்த முடிவு என்பது மிகவும் துரதிருஷ்டவசமான முடிவு. என்னுடைய பார்வை என்னவென்றால் அவர் மீண்டும் காங்கிரஸுக்கு வருவார்.
ஏனென்றால் அங்கு சென்றவர்கள் எல்லாம் யாருமே மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரியும். இந்த தேசத்தை பாதுகாக்கிற வேளையில் விஜயதாரணி இப்படி கட்சி மாறியிருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். எது எப்படியோ ஆல் தி பெஸ்ட் எங்கிருந்தாலும் வாழ்க.
ஒரு விஜயதாரணி போய்விட்டால் எப்படி இந்தியா கூட்டணி பின்னடவை வரும். விளவங்கோடு இடைத்தேர்தல் வரும். அப்போது விஜயதாரணி பெற்ற வாக்குகளை விட எங்கள் கட்சி வேட்பாளர் பெருவாரியான வாக்குகளை எடுத்து வெற்றி பெறுவார். விஜயதாரணி கட்சியில் சேர்ந்த இந்த நிமிடம் முதல் கட்சித் தாவல் தடை சட்டம் வந்துவிட்டது. அவரை தானாகவே எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கிவிடுவார்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸிலிருந்து விலகிய விஜயதாரணி: தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி விலகி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் தலைமையில் அவர் இணைந்துள்ளார்.
இவர் அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இணைவார் என கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இதை ஒவ்வொரு முறையும் மறுத்துவந்தார் விஜயதாரணி. இவருக்கு தமிழக அரசியலை விட தேசிய அரசியலின் மீதுதான் பற்று அதிகம். அதனால்தான் கன்னியாகுமரி இடைத் தேர்தலின் போது கூட தனக்கு வாய்ப்பு கேட்டார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ இறந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு வாய்ப்பு கொடுத்தது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் விஜயதாரணிக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது என தெரியவந்ததை அடுத்து அவர் சில தினங்களாக பாஜகவில் இணைவது குறித்து யோசனையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைவதை மறுத்தார் விஜயதாரணி. அது போல் அவர் தமிழக பட்ஜெட் கூட்டங்களில் கூட கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கேட்டபோதுதான் செல்வப்பெருந்தகை, விஜயதாரணி 3 முறை சட்டசபை உறுப்பினராக இருந்து வருகிறார். வழக்கறிஞர்.
கிராமங்களில் புள்ளை பிடிப்பவர்கள் வந்தாலே குழந்தைகளை வெளியே அனுப்ப மாட்டார்கள். அது போல் பாஜகவும் வேறு கட்சிகளில் யார் யார் எல்லாம் திறமையாக இருக்கிறார்களோ, யார் யார் எல்லாம் விவரமாக இருக்கிறார்களோ அவர்களை பிடிக்க வலை வீசுவார்கள்.
அவர்கள் வீசும் வலைக்கு எங்களுடைய சட்டசபை உறுப்பினர் விஜயதாரணி சிக்க மாட்டார். விவரமானவர், புத்திசாலி, அவருடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கை நடத்தவே விஜயதாரணி புதுடெல்லியில் 5 நாட்களாக முகாமிட்டுள்ளார். இதனால் பாஜகவினர், விஜயதாரணியை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளலாமா என துடிக்கிறார்கள்.
அது நடக்காது. விஜயதாரணிக்கு என்ன அதிருப்தி இருக்க போவது, 3 முறை எம்எல்ஏவாக இருந்து வருகிறார், சட்டசபை காங்கிரஸ் எம்பிக்களின் கொறடாவாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சி அவருக்கு நிறைய செய்துள்ளார்கள். இன்னும் அவருக்கு நிறைய செய்வோம். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறியிருந்த நிலையில் இன்றைய தினம் விஜயதாரணி பாஜகவில் இணைந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications