“எங்கிருந்தாலும் வாழ்க! எப்படியும் விஜயதரணி திரும்பி வருவார்”.. செல்வப்பெருந்தகை பரபர!
சென்னை: விஜயதரணி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வருவார் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விளவங்காடு எம்.எல்.ஏ விஜயதரணி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு எம்.எல்.ஏ.வாகவும், சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்து வந்தவர் விஜயதரணி. இவர் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3வது முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விஜயதரணி விரும்புவதாக கூறப்பட்டது. இதற்காக டெல்லி மேலிடத்திலும் அழுத்தம் கொடுத்து வந்தார் விஜயதரணி. லோக்சபா சீட் வேண்டும், அல்லது சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியாவது வேண்டும் என்றும் அவர் தலைமையை வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
பாஜகவில் இணைந்தது ஏன்?: ஆனால், அண்மையில், தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு, சட்டசபை காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டார். மேலும், வரும் லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் விஜய் வசந்த்துக்கே வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுறது.
இதன் காரணமாக விஜயதரணி, காங்கிரஸ் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளார்.
அதிர்ந்த காங்கிரஸ்.. பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி! டெல்லியில் பரபர!
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது என்றும் நரேந்திர மோடியின் தலைமை நாட்டிற்கு அவசியம். பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல் பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன் என்றும் பாஜகவில் இணைந்த பின் விஜயதரணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விஜயதரணி கட்சி தாவியுள்ளது குறித்துப் பேசியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “அந்த அம்மையார் எங்கிருந்தாலும் வாழ்க. அன்னை சோனியா காந்தி இந்த அம்மா மீது கருணை வைத்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். இந்த கட்சி எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுத்தது. அவர் மக்கள் பணி செய்யவில்லை என்றாலும் கட்சியில் மரியாதையுடன் நடத்தினோம்.
விஜயதரணி பாஜகவில் இணைந்தது துரதிருஷ்டவசமானது. எனது பார்வையில், விஜயதரணி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருவார். அங்கே சென்றவர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரியும். இந்த தேசத்தை பாதுகாக்க வேண்டிய வேளையில் இப்படிப்பட்ட செயலில் அவர் இறங்கி இருப்பது வருத்தம். எங்கிருந்தாலும் வாழ்க.
விஜயதரணி ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளதால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை. கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, எம்.எல்.ஏ பதவியை அவர் இழப்பார். இடைத்தேர்தல் வர உள்ளது, கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் எம்.எல்.ஏ வெற்றி பெறுவார்.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications