அதிர்ந்த காங்கிரஸ்.. பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி! டெல்லியில் பரபர!
சென்னை: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி, இன்று டெல்லி பாஜக தலைமையகம் சென்று பாஜகவில் இணைந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்றவர் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி. விஜயதரணி தற்போது சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி கொறடாவாக உள்ளார். இந்நிலையில், விஜயதரணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இன்று டெல்லியில் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளார்.

விஜயதரணி அதிருப்தி: கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எச். வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தொகுதியில் விஜயதரணி போட்டியிட காங்கிரஸில் வாய்ப்பு கேட்டார். ஆனால் கட்சித் தலைமை விஜயதரணிக்கு வாய்ப்பு கொடுக்காமல் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு வாய்ப்பு கொடுத்து அவரும் வெற்றி பெற்றார்.
அப்போது முதலே விஜயதரணி காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. எனினும், 2021 சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விஜயதரணிக்கு சீட் வழங்கப்பட்டது. அவரும் வெற்றி பெற்று தற்போது, சட்டசபையில் காங்கிரஸ் கொறடாவாக உள்ளார்.
லோக்சபா சீட்: இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட விஜயதரணி விரும்புவதாக கூறப்பட்டது. இதற்காக டெல்லி மேலிடத்திலும் அழுத்தம் கொடுத்து வந்தார் விஜயதரணி. குறைந்தபட்சம் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியாவது வேண்டும் என்றும் அவர் தலைமையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், அண்மையில், தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு, சட்டசபை காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டார். மேலும், வரும் லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் விஜய்வசந்த்துக்கே வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுறது.
டெல்லியில் முகாமிட்ட விஜயதரணி: இதனால், கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தார் விஜயதரணி. இந்நிலையில், பாஜக தரப்பு விஜயதரணியிடம் பேசி உள்ளதாகவும், லோக்சபா தேர்தலில் சீட் வழங்குவதாக உறுதி அளித்து விஜயதரணியை பாஜகவில் சேர்க்க பாஜக மேலிடம் முயன்று வருவதாகவும் கூறப்பட்டது.
தற்போது கடந்த சில நாட்களாக விஜயதரணி டெல்லியில் முகாமிட்டுள்ளார். அண்மையில் நடந்த தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட விஜயதரணி பங்கேற்கவில்லை. தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை பங்கேற்கும் நிகழ்வு சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிரமாண்டமாக நடைபெற்றபோதும் விஜயதரணி வரவில்லை.
இன்று பாஜகவில் இணைந்துள்ளார்: வரும் பிப்ரவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் அண்ணாமையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் விஜயதரணி, பாஜகவில் இணையலாம் எனக் கூறப்பட்டது.
ஆனால், இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்குச் சென்ற விஜயதரணி, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். பாஜக தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் அக்கட்சியில் விஜயதரணி இணைந்துள்ளார்.
சீட் டிமாண்ட்: பாஜகவின் தமிழக பொறுப்பாளரான அரவிந்த் மேனனை சந்தித்து விஜயதரணி பேசியுள்ளதாகவும், வரும் லோக்சபா தேர்தலில் சீட் அல்லது ராஜ்யசபா சீட் வேண்டும் என அவர் டிமாண்ட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜகவின் முன்னணி நிர்வாகிகள் சிலரையும் விஜயதரணி சந்தித்துப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அவர் பாஜகவில் இணைய இருக்கிறார்.
ஏற்கனவே: 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போதும் விஜயதரணி அதிமுகவுக்கு தாவுகிறார் என்ற செய்தி பரவியது. 2019 லோகபா தேர்தலின்போது அவர் பாஜகவுக்கு தாவப்போவதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், தற்போதும் அது பற்றிய தகவல் பரவுகிறது. பரவும் தகவல் உண்மையா என்பது இன்று தெரியவரும்.
அண்மையில் இதுகுறித்து விளக்கம் அளித்த விஜயதரணி, பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தற்போது பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications