விஜய் செயல் அருவருக்கத்தக்கது.. ஸ்டாலின் தான் பெஸ்ட்.. கூட்டணியில் இருந்தே விளாசிய செல்வபெருந்தகை
சென்னை: ''சட்டசபையில் முதல்வர் விஜய்யின் செயல் அருவருக்கத்தக்கது. அநாகரீகமானது. சட்டசபை ஒன்றும் சூட்டிங் ஸ்பாட் கிடையாது. அது மாண்புமிக்க ஒரு வரலாற்று சிறப்புமிக்க அவை. அங்கே இருந்து கொண்டு கையை காட்டி பேசியதை எல்லாம் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இன்று ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டத்தை தானே நடைமுறைப்படுத்துறாங்க. திமுக தலைவர் முக ஸ்டாலினின் வரலாற்றை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது'' என்று காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் விஜய் பேசினார். அப்போது திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான முக ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் தோற்றதை கிண்டல் செய்யும் வகையில் விஜய் பேசியிருந்தார். அப்பாவை எங்கே காணோம் என்று குட்டிக்கதை கூறி நையாண்டி செய்தார்.
விஜய்யின் இந்த பேச்சு மற்றும் அதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் தான் தனியார் தொலைக்காட்சிக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக செல்வபெருந்தகை கூறியதாவது:
சட்டசபையில் நடந்தது எல்லாம் அருவருக்கத்தக்கது. அநாகரீகமானது. அது ஒன்றும் சூட்டிங் ஸ்பாட் இல்லை. அது மாண்புமிக்க ஒருவரலாற்று சிறப்புமிக்க அவை. அங்கு இருந்து கொண்டு கையை காட்டி பேசியதை எல்லாம் நான் வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் நான் ஏற்கனவே கண்டித்துள்ளேன். இப்போதும் கண்டிக்கிறேன். இப்படியெல்லாம் செய்யக்கூடாது. அது நாகரீகம் கிடையாது.
நான் சட்டமன்றத்தில் காங்கிரஸ் குழு தலைவராக இருந்தேன். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறேன். தொடர்ந்து சட்டசபைக்கு வந்து பணியாற்றிய முதல்வர் ஸ்டாலின் தான் என்று டேட்டா சொல்லுது. மாவட்டங்கள் தோறும் அவர் சென்றதுபோல் யாரும் போகவில்லை. அவருடைய திட்டங்களை செல்ல வேண்டும். இன்று ஆட்சி மாறியிருக்கிறது. அவருடைய திட்டங்கள் பற்றிய பேச்சு தானே இருக்கிறது. அவரது திட்டத்தை தானே நடைமுறைப்படுத்துறாங்க.
புதுமைப்பெண் திட்டம், நான் புதல்வன், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கலைஞர் உரிமைத்தொகை போன்று எவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். உலகில் முதல் முறையாக காலை உணவுத்திட்டம் கொண்டு வந்தார். இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முதல்வர் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கலாம். இரண்டாம் உலக போரில் வென்ற வின்சென்ட் சர்ச்சில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதனால், அவரை வரலாற்றில் இருந்து மறைக்க முடியுமா?.
அதேபோல் தான் திமுக தலைவர் முக ஸ்டாலினின் வரலாற்றை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இன்றைக்கு ஏன் அவருக்கு வாக்களிக்கவில்லை என அழுதுகொண்டு இருக்கிறார்கள். எனது உறவினர்கள், சின்ன பிள்ளைகள் சொன்னதால் ஓட்டு போட்டுவிட்டு இப்போது, என்னிடம் வந்து தவறு செய்துவிட்டோம் எனக் கதறிக்கதறி அழுதுகொண்டு இருக்கிறார்கள். தவறு பண்ணிவிட்டோம் மாமா என்று சொல்கிறார்கள். மாற்றம் என்பதை மாற்ற முடியாது. இதுபோல, அநாகரீகமாக கொச்சைப்படுத்தி, புண்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டியது நல்லது.
ஆட்சி மாற்றம் நடந்த பிறகு இன்னமும் மரண ஓலங்களும், உயிர் பலியும் அடங்கவில்லை. பெண்களுக்கு முழுமையாக பாதுகாப்பு கொடுத்துவிட்டார்களா? குழந்தைகள் வன்புணர்வுக்கு உள்ளாகவில்லையா? கொலைகள் நடக்கவில்லையா? இதை சரிசெய்யாமல் பிறரைப் புண்படுத்துவது எந்த அளவிற்கு சரி?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் செல்வபெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதியில் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியின் 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அதன்பிறகு கூட்டணி மாறினர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேருக்கு முதல்வர் விஜய் அமைச்சர் பதவியை வழங்கி உள்ளார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று செல்வபெருந்தகை மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் உள்ள நிலையில் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications