செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது.. தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டி உள்ளது. 22 அடியை இன்று மாலைக்குள் எட்டினால் உபரி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளதாக பொதுப்பணித் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
Recommended Video
சென்னை பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி உயரத்தில் பெரும் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது, சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் முக்கிய நீர் நிலையான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய பெய்த மழை காரணமாக 21 அடியை தாண்டி உள்ளது.
ஏரியின் மொத்த உயரம் 24 அடியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது 21 .13 அடியே எட்டி உள்ளது, ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மழை குறைந்ததால் ஏரிக்கு வரும் நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.
நீர்வரத்து 1086 கனஅடி நீர்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1086 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 68கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து கனமழை நீடிக்கும் பட்சத்தில் ஏரியின் நீர்மட்டம் இன்று மாலை 22 அடி தொட்டால் உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.
உரிய அறிவிப்பு வழங்கப்படும்
கால்வாய் மற்றும் செம்பரம்பாக்கம் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு உரிய அறிவிப்பை வழங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த பின்னரே திறந்துவிடப்படும். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் கரையோரங்கள் பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குன்றத்தூர் நத்தம்திருநீர்மலை திருமுடிவாக்கம் சிறுகளத்தூர் மணப்பாக்கம் உள்ளிட்ட நிலங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
2889 மில்லியன் கன அடி
செம்பரம்பாக்கம் ஏரி இன்று காலை நேர நிலவரப்படி ஏரியின் நீர் மட்ட உயரம் 21.13 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2889 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 1086 கன அடியாகவும் உள்ளது. மழை இல்லாத காரணத்தால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.