“நான் மட்டுமா..? 7 அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்தோம்” செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்!
சென்னை: நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, சபாநாயகரை சந்தித்தது பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோட்டில் நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று அந்த விழாவை அதிமுக முன்னாள் அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாக பேச்சுகள் எழுந்தன.

அப்போது முதல் எடப்பாடி பழனிசாமியின் பெயரையே செங்கோட்டையன் கூறுவதை தவிர்த்து வந்தார். செங்கோட்டையன் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் படம் போடாமல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களை சந்தித்து வந்தார், பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வந்தார். இந்தப் பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்திற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
நேற்று முன்தினம் பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்யும்போது, செங்கோட்டையன் மட்டும் வெளியில் செல்லாமல் இருந்தார். எம்எல்ஏக்கள் வற்புறுத்தி அழைத்துச் சென்றனர். இந்தநிலையில், சபாநாயகர் அப்பாவுவை, செங்கோட்டையன் நேற்று முன்தினம் அவரது அறையில் திடீரென சந்தித்து பேசினார்.
இந்நிலையில், செங்கோட்யைன் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவை நேற்றும் தனியாக சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் விவாதத்தைக் கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர் அறையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் செங்கோட்டையன், எடப்பாடியை புறக்கணித்துவிட்டு சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார்.
நேற்று சட்டசபையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், தங்களுடனான சந்திப்பை செங்கோட்டையன் தவிர்த்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்க பதிலளித்த அவர், "ஏன் தவிர்த்தார் என்று அவரை போய் கேளுங்கள். அவர கேட்டா தானே காரணம் தெரியும். இங்க இன்னும் நிறைய பேர் வரவில்லை. அவர்களை பற்றி எல்லாம் கேக்குறீங்களா, நான் என்னைக்குமே யாரையுமே எதிர்பார்ப்பதில்லை. தனிப்பட்ட முறையில் இருக்கும் பிரச்னை குறித்த கேள்வியை இங்கு கேட்க வேண்டாம்" என்று கோபமாகவே பதிலளித்திருந்தார்.
சட்டப் பேரவையில் செங்கோட்டையனை சமாதானம் செய்யும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது. செங்கோட்டையனிடம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
எடப்பாடி பழனிசாமியின் கருத்து தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் பதில் அளிக்க மறுத்தார். இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய செங்கோட்டையன், "சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வருகை தந்தார். அவரிடம் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications