2016க்கு பின் அதிமுகவிற்கு போர்க்களமான தேர்தல் களம் - போட்டுடைத்த செங்கோட்டையன்
சென்னை: ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்தன. இந்த இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். அதன்பின் ஒவ்வொரு தடுமாற்றம் வரும்போதும், தடுமாற்றம் இல்லாமல் நான் செயல்பட்டுள்ளேன். 2016-க்கு பின் தேர்தல் களம் அதிமுகவிற்கு போராட்டக்களமாக மாறிவிட்டது என்று செங்கோட்டைன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 1972 இல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறேன். எம்ஜிஆரின் செல்வாக்கு நாடே வியக்கத்தக்க அளவில் இருந்தது. எம்ஜிஆர் வழியில் என்றும் செயல்படுபவன் நான். அதிமுகவிற்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்ஜிஆர். என்னை அழைத்து மனதார பாராட்டி புகழ்ந்தவர் எம்ஜிஆர்.

கிளைச்செயலாளர் பணி
கிளைக் கழக செயலாளராக எனது பணியை அ.தி.மு.க. வில் தொடங்கினேன். செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்து பொதுமக்கள், தொண்டர்களுடன் உரையாற்றுவேன். சத்தியமங்கலம் தொகுதியில் என்னை எம் ஜி ஆர் போட்டியிட சொன்னார் அந்த தொகுதி எனக்கு புதிதானது அங்கு நான் என்ன செய்ய முடியும் என கேட்டேன் என் பெயரை சொல் நீ வெற்றி பெறுவாய் என எம் ஜி ஆர் என்னிடம் சொன்னார்.
எம்ஜிஆர் பெயரே வெற்றி
எம்ஜிஆர் பெயரை சொன்னாலே போதும் தேர்தலில் வெற்றி பெறலாம். சாதாரண கிளை செயலாளராக தான் எனது வாழ்க்கையை தொடங்கினேன். பிறகு முக்கிய பொறுப்புகளை எனக்கு கொடுத்து தலைவர்கள் அளித்து அழகு பார்த்தனர். யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர். ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம். திராவிடர்கள், ஆன்மீகவாதிகள் ஏற்றுக்கொள்ளும் தலைமை பண்பை பெற்றிருந்தார் ஜெயலலிதா.
சசிகலா நியமனம்
ஜெயலலிதா மறைந்தபிறகு, அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்தன. இந்த இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். அதன்பின் ஒவ்வொரு தடுமாற்றம் வரும்போதும், தடுமாற்றம் இல்லாமல் நான் செயல்பட்டுள்ளேன். இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதாலேயே நான் அமைதியாக இருந்தேன். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா.
2016க்குப் பின் அதிமுக
2016-க்கு பின் தேர்தல் களம் போராட்டக்களம் ஆகி விட்டது என்பதை நாம் அறிவோம். 2019, 2021, 2024 உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த போது களத்தில் பிரச்சனை ஏற்பட்டது. 2024 இல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் வேலுமணிகூட இதை ஒருமுறை வெளிப்படுத்தினார். அதன்பின் பொதுச்செயலாளரை சந்தித்து கழகம் தொய்வோடு இருப்பதை எடுத்துரைத்தோம். கழகத்தை ஒன்றிணைக்கவும், வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்கவும் கோரிக்கை வைத்தோம்.
மீண்டும் அதிமுகவில்..
தேர்தல் நெருங்குகிறது அதனால் விரைவில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். பிரிந்தவர்களை சேர்க்கவில்லை என்றால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாங்கள் செய்வோம். வெளியே சென்றவர்களை தேர்தலுக்கு முன் கட்சியில் சேர்க்க வேண்டும். 10 நாட்களுக்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications