அழைத்து வந்த வைகோ.. நீதிமன்றத்தை அசர வைத்த வாதம்.. 7 தமிழர்களின் உயிரை காத்த ராம் ஜெத்மலானி!
Recommended Video
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்காக கடுமையான சட்ட போராட்டம் நடத்தியவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேரும் சிறையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ரத்து செய்தது.
ஆனால் இவர்கள் தூக்கு கயிறுக்கு மிக மிக அருகில் சென்ற சோகம் எல்லாம் நடந்து இருக்கிறது. ஆம் 2011ல் இவர்கள் 7 பேரும் தூக்கில் போடப்படும் நிலைக்கு சென்றனர்.

தூக்கு வழங்கினார்கள்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவை அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் 2011ல் நிராகரித்தார். அதனால் அதே வருடம் செப்டம்பர் 9-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டிருந்தது.

யார் வருவார்
இதற்கு எதிராக அவசர அவசரமாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கக் கோரியும், தண்டனையை குறைக்கக் கோரியும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் சார்பில் யார் ஆஜர் ஆவார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தனர்.

யார் வந்தது
அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மூலம் அழைத்து வரப்பட்டவர்தான் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. ராம் ஜெத்மலானி சென்னை வந்து வழக்கில் ஆஜர் ஆனதில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பங்கும் முக்கியமானது. சென்னை ஹைகோர்ட்டில் ராம் ஜெத்மலானி வைத்த வாதம் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

மிக மோசம்
அப்போதே தமிழர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் ராம் ஜெத்மலானி. ராம் ஜெத்மலானி தனது வாதத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கை பொறுத்தவரை நீதிமன்ற நடவடிக்கைகள் 1999 உடன் முடிவடைந்துவிட்டது. அதை இப்போது தொடர்வது சரியாக இருக்காது. இவர்கள் அளித்த கருணை மனுக்கள் பலமுறை ரத்து செய்யப்பட்டது.

ஏன் இல்லை
ஒருமுறை கூட ஏற்கப்படடவில்லை. இதற்காக 5 முறை ஜனாதிபதிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
இவ்வளவு கால தாமதம் செய்து முடிவெடுப்பது சட்டத்துக்கு முற்றிலும் புறம்பானது. அரசியல் சாசனம் 21-ல் வழங்கப்பட்ட உரிமைகளுக்கு எதிரானது. இவர்கள் நீண்ட காலம் ஜெயிலில் இருந்துவிட்டனர். இப்படி திடீர் என்று தூக்கு கொடுப்பது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது.

முக்கிய வாதம்
11 ஆண்டு காலம் கால தாமதம் செய்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.இவர்கள் 3 பேரும் இத்தனை நாட்கள் மிக கடுமையா சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இவர்கள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வாதம் செய்தார்.

என்ன திருப்பம்
இந்த வாதம் உண்மையில் வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆம், இந்த வழக்கு விசாரணைக்கு பின் மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதோடு கருணை மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியது. அதன்பின்தான் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ரத்து செய்தது.

என்ன நடந்தது
ராம் ஜெத்மலானி 7 பேர் உயிரை தன் வாதம் மூலம் காப்பாற்றினார். அதன்பின் 2014, பிப்.14- மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதையடுத்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டது.

என்ன முடிவு
இதனால் 2014ல் இந்த மூன்று பேருடன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்தான் காரணம்
ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு பின் ராம் ஜெத்மலானியின் வாதமும், அவர் அதில் வென்றதும்தான் முக்கிய காரணம் ஆகும். ஜெயலலிதாவின் இந்த தைரியமான முடிவை முதலில் பாராட்டியது ராம் ஜெத்மலானிதான். இதற்கு எதிராக மத்திய அரசு வழக்கு தொடுத்தது. அப்போதும் மூவர் சார்பாக ராம் ஜெத்மலானிதான் ஆஜர் ஆனார்.

மேலும் வாதம்
24 ஆண்டுகளாக 7 பேரும் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில், அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதே என்றும் வாதிட்டார். இதில் தமிழக அரசுக்கு 7 பேரையும் விடுவிக்க அதிகாரம் உள்ளது. ஆனால் ஆளுநர் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. இதிலும் அவருக்கே வெற்றி.

எங்கும்
நீதிமன்றத்தில் மட்டுமில்லாமல் நீதிமன்றத்திற்கு வெளியிலும் ராம் ஜெத்மலானி இந்த 7 பேருக்காக வாதம் செய்துள்ளார்.விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அரசு விருந்தினராக டெல்லிக்கு வரவழைத்தவர் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திதான். அவர்தான் அவர்களுக்கு பொருளாதார உதவிகளை செய்தார்.

கடுமை
ஆனால் ராஜீவ் காந்தி திடீர் என்று விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்ல இந்திய ராணுவத்தையும் அனுப்பி வைத்தார்.இது துரோகச் செயலாகும், என்று ராம் ஜெத்மலானி பேட்டி அளித்துள்ளார். அந்த அளவிற்கு ராம் ஜெத்மலானி 7 பேர் விடுதலையில் மிக மிக கவனமாக, ஆர்வமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போய் வாருங்கள்
7 பேர் விடுதலையில் மிக மிக ஆர்வமாக இருந்த ராம் ஜெத்மலானி தற்போது இயற்கை எய்திவிட்டார். 7 பேர் விடுதலை அடைந்து சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன் இவர் தன் மூச்சுக் காற்றை நிறுத்திக் கொண்டார்.












Click it and Unblock the Notifications