பெரியார் குறித்த பாஜகவின் அவதூறு ட்வீட்.. பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கண்டனம்
சென்னை: தந்தை பெரியார் குறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 46-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ட்விட்டரில் பெரியார் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில டிரெண்டிங்கானது.
அதே நேரத்தில் பாஜகவின் ஐடிவிங், பாஜகவின் தமிழ்நாடு பிரிவு ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் தந்தை பெரியார் குறித்து இழிவான கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தன. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
தமிழக அமைச்சர் ஜெயக்குமார், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது.
குடியுரிமைச் சட்ட விளக்கப் பொதுக்கூட்டம்... பாஜக சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்
இந்நிலையில் சென்னையில் பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவரிடம் இந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சி.பி. ராதாகிருஷ்ணன், இறந்தவர்களை அவதூறாக விமர்சிப்பது பாஜகவின் பண்பாடு அல்ல. அப்படி ஒரு ட்வீட்டை பதிவு செய்தவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும் என்றார்.