பக்கத்துல யாருனு கவனிச்சீங்களா.. திராவிட மாடல் காலாவதியானது அல்ல.. ஹெச் ராஜா சொல்லும் புது விளக்கம்
சென்னை: திராவிட மாடல் கொள்கை காலாவதியானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்த நிலையில், ஆளும் கட்சி தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில், திராவிட மாடல் கொள்கை காலாவதியானது அல்ல கற்பனையானது என்று பாஜகவின் ஹெச்.ராஜா கூறியுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு சமீப நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த ஆளுநர் திராவிட மாடல் கொள்கை குறித்து கூறியுள்ள கருத்து இந்த மோதல் போக்கை மேலும் தீவிரமாக்கியுள்ளது. அதாவது, "திராவிட மாடல் நிர்வாகம் என்பது ஓர் அரசியல் முழக்கம். ஆனால் இது காலாவதியாகிவிட்டது. இந்த காலாவதியான சித்தாந்தத்தை மீண்டும் நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

மேலும், "ஆளுநர் மாளிகையில் ஏராளமான மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அப்படியேதும் கிடையாது. கடந்த 2021ம் ஆண்டு ஆளுநர் மாளிகைக்கு 19 மசோதாக்கள் அனுப்பப்பட்டன. இதில் 18க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. மீதமிருந்து நீட் மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே கடந்த 2022ம் ஆண்டு 52 மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 48 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 3 மசோதாக்கள் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 1 மசோதா திரும்பப்பெறப்பட்டுவிட்டது.
இந்த ஆண்டை பொறுத்த அளவில் 7 மசோதாக்கள் பெறப்பட்டன. அதில் அனைத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஆளுநர் மாளிகையில் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை. மறுபுறம் தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற சம்பங்கள் நடைபெற்றுள்ளன. இப்படி இருக்கையில் எப்படி தமிழ்நாடு அமைதி பூங்கா என்று ஏற்றுக்கொள்ள முடியும்? குறிப்பாக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையில் அரசியல் புகுத்தப்பட்டுள்ளது. காவல்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. திமுகவினர் மீது சொத்து பட்டியல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார். ஆளுநரின் இந்த கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதற்கும் எடுத்துக்காட்டாக இருப்பதாகவும், இது சமூக நீதி ஆட்சி என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். அதேபோல திராவிட மாடல் திட்டத்தை காலாவதியாக்க வேண்டும் என்பதுதான் ஆளுநரின் திட்டம் என்றும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றும் திமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். திமுக மட்டுமல்லாது திமுகவின் கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆளுநர் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்திற்குள் நின்று செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஆளுநரின் கருத்துக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, "திராவிட மாடல் என்று ஒன்று இருக்கிறது என்று சொன்னால் 71 ஆகஸ்ட் 31ம் தேதிதான் தொடங்கியிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. மற்றபடி யார் திராவிட மாடல் பேசியிருக்கிறார்கள்? காலாவதியானது என்பதை விட திராவிட மாடல் என்பது கற்பனையானது என்று சொல்வதே சரியானதாகும். பொருத்தமில்லாமல் திடீரென ஒருவர் வாயில் வந்ததையெல்லாம் சொன்னால் அதை நாம் கருத்தில் கொண்டு, திராவிட மாடல் என்று பேசிக்கொண்டிருப்பது பொருத்தமாகாது" என்று கூறியுள்ளார். ஹெச்.ராஜா பேட்டியளிக்கையில் அவருடன் பக்கத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications