"நேருக்கு நேர்".. மோடி வரும் அதே நாளில்.. மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் ராகுல் காந்தி!
சென்னை: பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தரும் பிப்ரவரி 14-ந் தேதி மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசார ஜோதியில் டெல்லி தலைவர்கள் இணைந்துள்ளனர். பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தமிழகத்திலேயே முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இதனையடுத்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் தமிழகம், புதுவையில் பிரசாரம் செய்தார். அதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பினார்.
இந்நிலையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி வரும் 14-ந் தேதி தமிழகம் வருகை தருகிறார். அதே நாளில் மீண்டும் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.
பிப்ரவரி 14-ந் தேதி முதல் பிப்ரவரி 16-ந் தேதி வரை தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் ஒரே நாளில் தமிழகத்துக்கு வருகை தருவதால் தேர்தல் களம் பரபரத்து கொண்டிருக்கிறது.