ஒடிஷா ரயில் விபத்து.. எதுக்கு இவ்ளோ மவுனம்? மக்களே பதிலடி தருவாங்க.. மத்திய பாஜக அரசை விளாசிய ஆ.ராசா
சென்னை: ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு கனத்த மவுனம் காக்கிறது; இது தொடர்ந்தால் லோக்சபா தேர்தலில் மக்கள் சரியான பதிலடியை பாஜகவுக்கு தருவார்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி சாடியுள்ளார்.
ஒடிஷாவின் பாலசோர் அருகே நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை. மேலும் ஒடிஷாவில் இருந்து 137 பயணிகளுடன் சிறப்பு ரயில் ஒன்று இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது.

முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார் ஆ. ராசா. இது தொடர்பாக ஆ.ராசா கூறியதாவது: ஒடிஷா ரயில் விபத்து சம்பவம் உலகத்தை உலுக்கி இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியோ மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இது தொடர்பாக பேசவே மறுக்கின்றனர். ரயில் விபத்து நிகழ்ந்து இத்தனை மணிநேரமாகியும் ஏன் இந்த விபத்து நிகழ்ந்தது? எப்படி இந்த விபத்து நிகழ்ந்தது? என்பது குறித்து எதுவுமே பேச மறுக்கிறது மத்திய பாஜக அரசு. இப்படியே மவுனம் காத்து இருந்தால் லோக்சபா தேர்தலில் நிச்சயம் பாஜகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
ஒடிஷா ரயில் விபத்து எப்படி நிகழ்ந்தது? தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனித தவறா? ஊழியர்களின் கவனக் குறைவா? இதனை மக்களுக்கு தெளிவுப்படுத்திதான் ஆக வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு, விளம்பர பிம்பத்தை வைத்து ஆட்சி செய்வதில்தான் கவனமாக இருக்கிறது. விபத்துகளைத் தடுக்கக் கூடிய கவாச் தொழில்நுட்பத்தை மத்திய அரசு முறையாக பயன்படுத்தவில்லை. மொத்தமே 2% அளவுக்குதான் கவாச் தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி இருக்கிறது. இவ்வாறு ஆ.ராசா எம்பி கூறினார்.












Click it and Unblock the Notifications