ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்! 30 ஆண்டுகாலம் பத்திரிகைத்துறை பயணம்! பார்த்திபன் மகாராஜன் மறைந்தார்
சென்னை: பத்திரிகைத்துறையில் பலருக்கும் ஆசானாக திகழ்ந்த தினமலர் நாளிதழ் ஆசிரியர் பார்த்திபன் உடல்நலக் குறைவால் காலமானார்.
இதையடுத்து அவரது உடல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பட்டிவீரன்பட்டியில் தகனம் செய்யப்பட்டது.
ஓராண்டு, ஈராண்டு அல்ல, 30 ஆண்டுகாலத்திற்கும் மேலாக பத்திரிகைத்துறையில் பயணித்த அவரிடம் செய்திகளை தொகுப்பது தொடர்பாக பாலபாடம் கற்ற பலர், இன்று பல்வேறு ஊடக நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் உள்ளனர்.

தினமலர் ஆசிரியர்
தினமலர் நாளிதழின் மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட அலுவலகங்களில் ஆசிரியராக பணியாற்றியவர் பார்த்திபன் மகாராஜன். செய்திகளை தொகுப்பதில் வார்த்தை ஜாலம் காட்டக்கூடிய திறமைமிக்கவர். அதேபோல் தனக்கு கீழ் உதவி ஆசியர்களாகவும், ஜூனியர் செய்தியாளர்களாகவும் பணியாற்றிய பலரை பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்க வைப்பதிலும் அதிக கவனம் செலுத்தியவர். இதனால் தான் இவரிடம் பாலபாடம் கற்ற பலர், இன்று முன்னணி ஊடகங்கள் பலவற்றில் நல்ல பொறுப்புகளில் உள்ளனர்.

உடல்நலக் குறைவு
இதனிடையே அண்மைக்காலமாக பார்த்திபன் மகாராஜனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானதை அடுத்து அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.

மனைவி -மகள்
மறைந்த மூத்த பத்திரிகையாளர் பார்த்திபன் மகாராஜனுக்கு ரேவதி என்ற மனைவியும், காவ்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உரிய நிதி உதவி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பார்த்திபனுக்கு 58 வயது மட்டுமே ஆகிற நிலையில் அவரது திடீர் மறைவு அவரை நெருங்கி அறிந்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்துள்ளது.

இரங்கல்கள்
அவரது மறைவு குறித்து ஒன் இந்தியா குழுமத்தின் தலைமை ஆசிரியர் ஏ.கே.கான் கூறுகையில், ''பார்த்திபன் சார் என்னைப் போன்ற எத்தனையோ பத்திரிகையாளர்களுக்கு முதல் ஆசானாக விளங்கியவர். அவர் மதுரை பல்கலைக்கழகத்தில் நடத்திய ஜர்னலிசம் வகுப்புகள், வகுப்புகளைத் தாண்டி அவருடன் நடந்த உரையாடல்கள், படித்துக் கொண்டிருந்தபோதே தினமலரில் இன்டர்ன்ஷிப் செய்ய வாய்ப்பு தந்தது, படிப்பை முடித்தவுடன் அவருடனேயே பணியாற்றவும் ஏற்படுத்தித் தந்த வாய்ப்பு என பின்னோக்கிய நினைவுகள் கலங்கடிக்கின்றன. நான் பின்னர் தினமணிக்கும் ஒன் இந்தியாவுக்கும் இடம் மாறினாலும் பார்த்திபன் சார் என்ற ஒற்றை ஆளுமையின் தாக்கம் எங்களிடம் மறைந்ததே இல்லை. மறையப் போவதும் இல்லை.
என்னைப் போல பலர் அவரிடம் பெற்ற பயிற்சியே தினமணியின் முன்னாள் ஆசிரியர் மறைந்த ஆர்.எம்.டி. சம்பந்தம் போன்ற ஜாம்பவானிடமும் தாக்குப் பிடித்து பணியாற்ற உதவியது. பார்த்திபன் சார் என்றால் நிதானம், நேர்மை. ஆர்.எம்.டி என்றால் வேகம், நேர்மை. இருவரும் இன்று இல்லை. அவர்கள் இல்லாத இந்த தனிமையான பயணம் ரொம்பவே வலிக்கிறது'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நான்காம் பக்கம்
தினமலர் நாளிதழில் பார்த்திபன் மகாராஜன் எழுதும் நான்காம் பக்கம் கட்டுரை மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. பார்த்திபனின் எழுத்துக்களை குறிப்பிட்டு அவரை அறியாதவர்களும் கூட அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications