எடப்பாடியின் வீட்டுக்குள்ளேயே கலகக் குரலை எழுப்பிய 6 மாஜி அமைச்சர்கள்: சொல்றது யாருனு பாருங்க
சென்னை: அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்துள்ளதால் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் 6 மாஜி அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று மூத்த நிர்வாககிள் கோரிக்கை எழுப்ப, இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பின்னர் அவர் கட்சியிலிருந்து கட்சி பொருளாளர் பதவியிலிருந்தும் பொதுக் குழுவினரால் நீக்கப்பட்டார்.

தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் பல முறை நீதிமன்றங்களில் பல வழக்குகளில் வாதிட்டும் அந்த வழக்குகள் தோற்று போனது.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இரட்டை தலைமை இருப்பதால் துணிந்து முடிவுகளை எடுக்க முடியவில்லை. கட்சியும் வளர்ச்சி அடையவில்லை, 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி , உள்ளாட்சி தேர்தலில் தோல்வி என தொடர் தோல்விகளை காரணம் காட்டிதான் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்தது.
இதையடுத்து 2024 லோக்சபா தேர்தலிலாவது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வெல்லும் என பார்த்தால் அந்த தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் அதிமுக உரிமை மீட்பு குழுவில் இருந்து பிரிந்த ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற ஒன்றை தொடங்கியுள்ளனர்.
ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால்தான் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என மூத்த நிர்வாகிகள் சிலர் கூறி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமியிடம், ஓபிஎஸ் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பி வருகிறார்கள்.
அதற்கு அவர் முடியாது என்பதை போலவும் அவர் என்னென்ன செய்தார் என்பதை பட்டியலிட்டும் மறுத்து வருகிறார். இந்த நிலையில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கலக குரலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களே எழுப்பியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து பத்திரிகையாளர் லட்சுமணன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 25 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக; அவர் எடுத்த நிலைப்பாடுகளுக்கு எதிராக கலகக்குரல் எழும். அந்தக் குரல் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று பலமுறை சொல்லிவந்தேன்.
நேற்று சேலத்தில் எடப்பாடியின் வீட்டுக்குள்ளேயே வைத்து கலகக்குரலை எழுப்பியிருக்கிறார்கள் ஆறு முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகிய ஆறு பேரும்தான் சுமார் இரண்டரை மணி நேரம் எடப்பாடியை உலுக்கி எடுத்திருக்கிறார்கள்.
தொடர் தோல்விகள் கட்சிக்கு நல்லதல்ல... பிரிந்து இருப்பதால்தான் இந்தநிலை... இனியும் இது தொடர்ந்தால் கட்சிக்காரர்கள் வேலை செய்ய மாட்டார்கள்... இந்தத் தேர்தலிலேயே கிளைக்கழகச் செயலாளர்களே வேலை பார்க்கவில்லை... பிரிந்தவர்கள் ஒன்று சேர்வோம்... இனியும் தாமதிக்கக் கூடாது... இதுதான் ஆறு பேர் முன்வைத்த வாதங்கள்.

எடப்பாடி கடைசிவரை உறுதியாக இருந்து அதெல்லாம் சரிப்பட்டு வராது என்றே சொல்லியிருக்கிறார். ஆறு பேரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க... வாதங்கள் தடித்து... முடிவு எட்டப்படாமலேயே வெளியேறியிருக்கிறார்கள் ஆறு பேரும்.
அடுத்த வாரம் மீண்டும் எடப்பாடியை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்த இருக்கிறது ஆறு பேர் குழு. அப்போது குழுவினர் எண்ணிக்கை அதிகமாகலாம்!
நாரதர் கலகம் மட்டுமல்ல... ஆறு பேர் கலகமும் நன்மையில் முடியும்... முடிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதிமுகவினர். பிரிந்தவர்கள் கூடுவது காலத்தின் கட்டாயம்! இவ்வாறு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications