கைதாகும் செந்தில் பாலாஜி – அசோக் குமார்? இன்று சம்மன் வழங்கியதன் பின்னணி.. வசமா சிக்கிட்டாங்களே?
சென்னை: தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். இந்நிலையில் தான் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோருக்கு இனறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. தவெக தலைவர் விஜய் முதல்வராக உள்ளார். தவெக ஆட்சி 6 மாதம் வரை தான் தாங்கும். அதன்பிறகு தாங்காது என்று திமுகவினர் கூறி வருகின்றனர்.
குறிப்பாக நேற்றைய தினம் கைதான முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய்யின் ஆட்சி 6 மாதத்துக்கு பிறகு இருக்காது. இருக்கவும் விடமாட்டோம் என்று சவால் விட்டார்.
இதற்கிடையே தான் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க பெரிய சதித்திட்டம் நடந்துள்ளது. விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் அடுத்ததாக சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து இறக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று ஒரு டீம் தவெக எம்எல்ஏக்களை நாடி கோடிக்கணக்கில் பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் காட்டி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். ஐடிபிஎஸ் கருத்து கணிப்பு நடத்தி வரும் அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், பள்ளிக்கரணை செல்வன், மணப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன், ஹஸ்தினாபுரத்தை ராஜேஷ், கரூரை சேர்ந்த ரமேஷ், கார்த்திக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் முன்னாள் அமைச்சரும், திமுகவின் கோவை தெற்கு தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் இந்த செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார். அவருக்கு இன்னும் முன்ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இன்று சம்மன் வழங்கி உள்ளனர். கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜியின் பூர்வீக கிராமம் என்பது ராமேஸ்வர பட்டியாகும். இங்கு செந்தில் பாலாஜியின் பெற்றோர் உள்ளனர்.
இன்று சென்னை திருவல்லிக்கேணி போலீசார் செந்தில் பாலாஜி மற்றும் தம்பி அசோக் குமார் ஆகியோருக்கான சம்மனை அவர்களின் பெற்றோரிடம் வழங்கி கையெழுத்து பெற்றனர். இருவரும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான புகாரில் தவெக எம்எல்ஏ இளையராஜா, இதன் பின்னணியில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் இருப்பதாக கூறியிருந்தார். இதனால் தான் தற்போது அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அசோக் குமார் முன்ஜாமீன் கோரியுள்ள நிலையில் செந்தில் பாலாஜி அதையும் செய்யவில்லை. இதனால் இருவரும் விசாரணைக்கு பிறகு கைதாகும் நிலை வரலாம்.
ஏனென்றால் பொதுவாக பெரிய பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்டு தான் கைது செய்யப்படுவார்கள். அப்படி பார்த்தால் இந்த சம்மன் என்பது செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமாருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்று சனிக்கிழமை பாதி நாள் முடிவடைந்துவிட்டது. நாளை ஞாயிறு. அதன்பிறகு திங்கட்கிழமை. இதனால் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உடனடியாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாலும் கூட அது விசாரணைக்கு வர வாய்ப்பில்லை. இது செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications