"9 மாதம்.." சட்டசபையில் செந்தில் பாலாஜியை மடக்கிய ஓபிஎஸ்.. சப்போர்ட்டுக்கு தங்கமணி.. ஆவேச விவாதம்
சென்னை: தமிழ்நாட்டில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டு தொடர்பாக சட்டசபையில் இன்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கியுள்ளது. இந்த விவகாரம் இன்று சட்டசபையிலும் எதிரொலித்தது.
அப்போது நடந்த காரசார வாதங்களை பாருங்கள்..
சட்டசபையில் விவாதம்
அதிமுக ஆட்சியில் கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாததே மின்தடைக்கு காரணம். 10 நாட்களில் பராமரிப்பு பணியை போர்க்கால அடிப்படையில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பின்னர் மின்தடை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
ஓபிஎஸ் மறுப்பு
இதை மறுத்தார் ஓ.பன்னீர்செல்வம். பராமரிப்பு பணி நடக்கவில்லை என்கிறீர்கள். ஆனால் நீங்கள் சொல்லும் அந்த 9 மாதங்களாக மின்தடை இல்லையே. அதிமுக ஆட்சி இருந்தவரை மின் தடை இல்லாமல் பார்த்துக் கொண்டோமே. திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் மின்தடை உள்ளது என்று கூறினார்.
மின்சார பராமரிப்பு இல்லை
இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தேனி மாவட்டம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணி இல்லாததால்தான் மின்தடை ஏற்படுகிறது. பராமரிப்பு பணி முடிந்ததும் மின்தடை கண்டிப்பாக இருக்காது என்றார்.
தங்கமணி கிண்டல்
கடந்த ஆட்சியில், மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி பேசும்போது, செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது மின்சாரத் துறையைப் பெருமையாகப் பேசினார். கட்சி மாறியதும் தற்போது எப்படி பேசுகிறார் என்பதை பார்க்க வேண்டும் என்றார். இவ்வாறு காரசாரமாக வாதம் நடைபெற்றது.
அணில்கள் தாவியதால் மின்வெட்டு
முன்னதாக அணில்கள் மின்சார வயர்களில் தாவியதால் மின் வெட்டு ஏற்படுவதாக தனது பேட்டியில் செந்தில் பாலாஜி கூறியது, சமூக வலைத்தளங்களில், கிண்டலுக்கு உள்ளாகியிருந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் கூட தனது டுவிட்டர் பக்கத்தில் இதை கேலி செய்திருந்தார்.