மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க 28ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்! இணைக்கும் வழிமுறைகள் என்னென்ன
சென்னை: தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கச் சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சார துறை சார்பில் பல்வேறு தரப்பினருக்கும் மானிய விலையிலும் இலவசமாகவும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.
அதேபோல வீடுகளுக்கும் கூட முதல் 100 யூனிட்கள் இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோல விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு முகாம்
இதற்கிடையே தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மின்வாரிய இணைப்பு எண்ணுடன் ஆதர் எண்ணை இணைக்கும் பணிகள் இப்போது தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளைத் தமிழ்நாடு மின்வாரியம் முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்காகச் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக அவர் முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வரும் நவ. 28 முதல் டிச. 31 வரை சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எப்படி
ஆதாரை இணைப்பதினால் மின் நுகர்வோருக்கு வழங்கப்படும் வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் மாற்றங்கள் இருக்காது என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. பில் செலுத்தும் கவுன்டர்களிலேயே ஆதாரை இணைக்கலாம் என்றும் ஆதார் அட்டை அல்லது ஆதார் எண்ணைச் சொன்னாலே போதும் என்றும் கூறப்பட்டு உள்ளது. குடிசை விவசாய மின் இணைப்புகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்றும் 100 யூனிட் மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், டிச.31 வரை பொதுமக்கள் தங்கள் மின் கட்டணத்தை எவ்வித சிரமமும் இல்லாமல் ஏற்கனவே உள்ள நடைப்பறுப்படி செலுத்தாலம் என்று கூறப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது ஒன்றிய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.

நேரம்
பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும். பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது தமிழகத்தில் உள்ள அனைத்து 2.811 பிரிவு அலுவலங்களிலும் வருகின்ற 28.11.2022 திங்கட்கிழமை முதல் 31.12.2022 வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும். பொதுமக்கள் இந்த தருணத்தினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்கள் மூலம் தங்களது மின் இணைப்பு எண்ணிணை ஆதாருடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மின் கட்டணம்
31.12.2022 வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தினை எவ்வித சிரமும் இன்றி ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி செலுத்தலாம். அதற்கு எவ்வித இடையூறும் இல்லை. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது ஏற்கனவே பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு மின் நுகர்வோர்களின் தொலைபேசி எண்களை மின் இணைப்புடன் இணைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது வீடு. கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளை பெற்றிருக்கும் மின் நுகர்வோர்கள் பற்றிய விவரங்களை புதுப்பிக்கும் பொருட்டு அவர்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

தகவல்கள் புதுப்பிப்பு
இவ்வாறு ஆதாரை இணைக்கும் பொழுது தற்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரர்கள் பற்றிய விவரம் கிடைக்கப் பெறுவதோடு. ஏற்கனவே பெயர் மாற்றம் செய்யப்படாமல் இறந்து போன/பழைய மின் இணைப்பு உரிமைதாரர்களின் பெயர்களில் இருக்கும் மின் இணைப்புகளை தற்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரர்களுக்கு தகுந்த ஆவணங்களின்படி பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. இதனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு மின் இணைப்பு உரிமையாளர்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் கிடைக்கப்பெறும்.

இலவச மின்சாரம்
மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதினால் வீடுகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அதேபோன்று, கைத்தறி மற்றும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மானியமும் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்படும். ஆதாரை இணைப்பதினால் மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது" என்று அவர் கூறியுள்ளார்,












Click it and Unblock the Notifications