ஒரே இடத்துல அரை மணி நேரம் செந்தில் பாலாஜியை யார் உட்கார சொன்னாங்க? அமலாக்கத் துறை கேள்வி
சென்னை: ஒரே இடத்தில் அரை மணி நேரம் உட்காருமாறு செந்தில் பாலாஜியை யாரும் நிர்பந்திக்கவில்லை என அமலாக்கத் துறை தன் வாதத்தில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு அவர் பல கட்ட நீதிமன்ற வழக்குகளுக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது பதவியும் பறிக்கப்படாமல் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் இரு முறையும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி தாக்கல் செய்தார் திமுக எம்பியும் வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ. இந்த நிலையில் அந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான இளங்கோ, செந்தில் பாலாஜியின் உடல்நிலை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலிருந்தே சரியில்லை.
அவருக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதம் செய்தார். இதற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதை கேட்ட நீதிபதி ஜெயசந்திரன், இந்த வழக்கில் அமலாக்கத் துறை பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அந்த வகையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் தனது வாதத்தில் கூறியிருப்பதாவது: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் அவர் வழக்கின் சாட்சியங்களை கலைத்து விடுவார். செந்தில் பாலாஜியின் உடல்நிலை நீதிமன்றக் காவலில் இருந்தோ சிறையில் இருந்தோ சிகிச்சை பெறாத வகையில் இல்லை.
மேலும் அவரால் 30 நிமிடங்கள் கூட உட்கார முடியவில்லை என்கிறார். அவரை யாரும் 30 நிமிடங்கள் உட்கார வேண்டும் என நிர்பந்திக்கவே இல்லை. இவ்வாறு அமலாக்கத் துறை தனது வாதத்தை முன் வைத்தது.












Click it and Unblock the Notifications