மீண்டும் சூடுபிடித்த செந்தில் பாலாஜி வழக்கு.. ஆஜரான வங்கி மேனேஜர்.. குறுக்கிட்டு மறுத்த செ.பா தரப்பு
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சி விசாரணையை தொடங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். கரூர் சிட்டி யூனியன் வங்கியின் அப்போதைய தலைமை மேலாளளர் ஹரிஷ்குமாரிடம் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது ஹரிஷ் குமார் கூறிய தகவல்களுக்கு செந்தில் பாலாஜி தரப்பு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவை தொடங்கியது.

குற்றச்சாட்டு பதிவின் போது, தன் மீதான வழக்கு பொய்யாகப் புனையப்பட்டது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், அமலாக்கத்துறை கைப்பற்றிய அவணங்கள் என்னுடையது அல்ல என்றும் செந்தில் பாலாஜி நீதிபதி அல்லியிடம் தெரிவித்தார்.
மேலும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருந்ததார். செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்த நிலையில், அதனை ஏற்று, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
இந்நிலையில் சாட்சிகளின் விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் முதல் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளர் ஹரிஷ்குமார் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் விசாரணை நடத்தினார். செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா, மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை சாட்சி கூண்டில் நின்றவாறு பதிலளித்தார் ஹரிஷ் குமார்.
அப்போது வங்கி தலைமை மேலாளர் அளித்த பதில்கள் சிலவற்றுக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் அசல் ஆவணங்கள் இல்லை என்றும், சில கூடுதல் ஆவணங்களை தற்போது புதிதாக தாக்கல் செய்து இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வங்கி தலைமை மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணைக்காக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். இதன்மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 55 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications