செந்தில் பாலாஜிக்கு என்ன கோபம்? அண்ணானு அழைத்த கரூர் பெண் எம்எல்ஏவை ஏறெடுத்தும் பார்க்கலியே!
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரூர் மாவட்ட எம்எல்ஏவையும் கவுன்சிலர்களையும் அமைச்சர் செந்தில் பாலாஜி நிமிர்ந்து கூட பார்க்கவில்லை என்ற தகவல்கள வெளியாகியுள்ளன.
மதிமுகவிலிருந்து திமுக, அங்கிருந்து அதிமுகவுக்கு சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். சசிகலா தரப்புக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட செந்தில் பாலாஜி , முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட் வில் புக்கிலும் இடம்பெற்றிருந்தார்.

அவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் அணியிலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். இந்த நிலையில் அங்கிருந்து அவர் திமுகவில் இணைந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, கட்சியில் பதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தார்.
இது சொந்த கட்சிக்காரர்களுக்கே புகைச்சலை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் அவர் போக்குவரத்து துறையில் கண்டக்டர், டிரைவர் உள்ளிட்ட பணிகளை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அவரது வீட்டில் ரெய்டுகள் நடத்தப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது.
அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கிருந்தபடியே அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்த நிலையில் அவருக்கு 8 முறைக்கு மேல் ஜாமீன் ரத்தானது. இதையடுத்து அவரது உடல்நிலையை காரணம் காட்டி அவரை வெளியே கொண்டு வர திமுக மூத்த வழக்கறிஞர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மதிய உணவு சாப்பட்டபோது அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரது இதய துடிப்பு சீராக இல்லை. இதனால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு முக்கிய நபர்கள் சிகிச்சை பெறும் அறை எண் 6115 இல் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது. நேற்று நண்பகல் பரிசோதனைகளை செய்ய மாடியிலிருந்து தரைதளத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மற்றும் பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட திமுகவினர் அவரை சந்திக்க முற்பட்டனர்.
ஆனால் காவல் துறையினர் அவர்களை சந்திக்க விட மறுத்தனர். செந்தில் பாலாஜியை சந்திக்க வேண்டுமானால் சிறையில் விண்ணப்பித்துதான் பார்க்க வேண்டும் என சொல்லிவிட்டனர். இதனால் செந்தில் பாலாஜியை அவர்கள் அண்ணா அண்ணா என அழைத்தனர். ஆனால் அவரோ வீல் சேரல் குனிந்த தலை நிமிராமல் யாரையும் பார்க்காமல் பரிசோதனை அறைக்கு சென்றுவிட்டார்.
உடல்நிலை சரியில்லாத நிலையில் ஜாமீனும் கிடைக்கவில்லை, ஆபரேஷன் செய்ததால் கால் மரத்து போகிறது உள்ளிட்ட பிரச்சினைகளால் மன உளைச்சலில் உள்ள செந்தில் பாலாஜி சொந்த கட்சியினரை கூட பார்க்க அவர் விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது. திமுக தலைமைக்கே நெருக்கமாக கம்பீரமாக கரூரை வலம் வந்த நிலையில் தற்போது இப்படிப்பட்ட நிலையில் இருப்பதால் அவர் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications