ரிசல்ட் நாள் அன்றே செந்தில் பாலாஜி போட்ட 2 மனுக்கள்.. ED-யை 10ம் தேதி ரெடியாக வரச் சொன்ன நீதிபதி!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக 2 மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில், வங்கி அசல் ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் வாதிட அனுமதிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி வங்கியின் அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30 அன்று அந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வங்கி சார்பில் வழங்கப்பட்ட ஆவணங்களில், இரு ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டவை என்பதால் அந்த அசல் ஆவணங்களையும் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இதுதொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 4 ஆம் தேதிக்கு அதாவது இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், கடந்த 2012 முதல் 2022 வரை பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிகளில் பணிபுரிந்த வங்கி ஊழியர்களின் விவரங்களை வழங்க வேண்டும். 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களையும் தெரிவிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை ஆகிய இரு தரப்பும் வரும் ஜூன் 10 ஆம் தேதியன்று வாதிட வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை தள்ளி வைத்தார். மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளார்.
“மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன் கூட கொடுக்காமல் பல மாதங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் அவரின் பணிகளை முடக்க வேண்டும் என்று இந்த சதிச் செயலைச் செய்தார்கள். பாஜகவின் அத்தனை சதிச் செயல்களையும் கடந்து, செந்தில் பாலாஜியால் உருவாக்கப்பட்ட செயல்வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.” என லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் இன்று லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கோவை, கரூர் உட்பட தமிழ்நாடு + புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முக்கிய மனுக்கள் ஜூன் 10ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.












Click it and Unblock the Notifications