சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி முதலில் செய்தது இதுதான்.. யாரை சந்தித்தார் தெரியுமா?
சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்து விடுதலையாகியுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை வரவேற்க திமுகவினர் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். புழல் வெளியே வந்த அவர் முதலில் என்ன செய்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
திமுகவில் முக்கிய அமைச்சராக வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் திமுகவில் மது விலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சராக இருந்தார்.

செந்தில் பாலாஜி: இதற்கு முன்பு அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி, ஜெயலலிதா ஆட்சியிலும் அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணம் வாங்கிக் கொண்டு அரசு வேலை தந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் வருமான வரித்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தது.
இது தொடர்பான புகாரில் கடந்தாண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த சோதனையின் இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு பல முறை அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்த போதிலும் அவருக்குப் பிணை கிடைக்கவில்லை. இடையில் அவர் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். அவருக்கான நீதிமன்ற காவல் பல முறை நீட்டிக்கப்பட்டது.
ஜாமீன்: இந்தச் சூழலில் தான் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் இன்று மாலை புழல் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், முதலில் உச்ச நீதிமன்றத்தின் நகல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதன் பிறகு செந்தில் பாலாஜிக்கு உத்தரவாதம் அளித்தவரில் மனுவில் சில குழப்பங்கள் எழுந்தது. இதனால் செந்தில் பாலாஜி இன்று விடுதலையாவாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
ஆனாலும், இந்த சிறு குழப்பங்கள் எல்லாம் தீர்க்கப்பட்ட உடன் செந்தில் பாலாஜி சற்று நேரத்திற்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரை வரவேற்கப் புழல் சிறை முன்பு பெருந்திரளாக திமுக தொண்டர்கள் கூடியிருந்தனர். சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழக்கறிஞர் அணி: சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் செந்தில் பாலாஜி முதலில் திமுக வழக்கறிஞர் அணியுடன் ஆலோசனை நடத்தினார். ஏனென்றால் செந்தில் பாலாஜிக்கு பிணை கிடைத்ததில் திமுக வழக்கறிஞர் அணியின் பங்கு முக்கியமானது. அவர் கைது செய்யப்பட்டது முதல் சுமார் 15 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல மனுக்களைத் தாக்கல் செய்யப்பட்டுப் பல வாதங்களை வழக்கறிஞர் அணி முன்வைத்தது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க திமுக வழக்கறிஞர் அணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இன்று செந்தில் பாலாஜி விடுதலையாகும் போது சிறை வளாகத்திற்குள் வழக்கறிஞர் அணி மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் முதலில் அவர்களையே சந்தித்தார். அவர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய செந்தில் பாலாஜி, அதன் பின்னரே அங்கிருந்து காரில் ஏறிக் கிளம்பினார்.












Click it and Unblock the Notifications