ஐசியூ-வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி.. அறை எண் 435ல் தீவிர கண்காணிப்பு!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு பரிந்துரைத்தது.
இதையடுத்து கோர்ட்டில் முறையிட்டு, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, கடந்த 21ஆம்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் இதயத்திற்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் விதமாக தொடர்ந்து 4 மணி நேரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதையடுத்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதயத்தில் அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஐசியுவில் செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, உடல்நிலை சீராக உள்ளதால், வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவேரி மருத்துவமனையின் 7வது தளத்தில் உள்ள ஐ.சி.யூவில் இருந்து 4-வது தளத்தில் உள்ள தனி அறையில் மாற்றப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அறை எண் 435ல், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ள நிலையில், தொடர்ந்து அவரது உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications