வேலை வாங்கி தருவதாக முறைகேடு.. போலீஸ் வழக்கு.. முன் ஜாமீன் கேட்கிறார் செந்தில் பாலாஜி
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேடு செய்ததாக மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி 2 கோடியே 80 லட்சம் முறைகேடு செய்ததாக மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், அருண்குமார் என்பவர் அளித்த புகாரில் செந்தில் பாலாஜி ஏற்கனவே முன்ஜாமின் பெற்றுள்ளார்..

இந்நிலையில் இன்று சென்னை, கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்திய குற்றபிரிவு காவல் துறையினர், அவரின் மந்தைவெளி இல்லத்திற்கு சீல் வைத்தனர்..
இந்த வழக்கில் அவர் கைதாக கூடும் என்பதால், முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் தன்னுடைய பெயர் இல்லை என்றும் அரசியல் விரோதம் காரணமாக தன் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, 2017-ம் ஆண்டு மத்திய குற்றபிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கடந்த 2019-ம் ஆண்டு இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்தகட்டமாக தன்னை கைது செய்ய கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி சேஷசாயி முன் முறையிடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, முன்ஜாமின் வழக்கை பிப் 3-ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications