செந்தில் பாலாஜி கையில் “இன்பியூஷன் நீடில்”.. கடும் சோர்வு.. சேரில் அமர வைத்து கேள்வி கேட்ட நீதிபதி!
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பொருத்தப்படும் ஊசியுடன் இருந்தார். செந்தில் பாலாஜியை நாற்காலியில் அமர வைத்து, அவரிடம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டி, குற்றச்சாட்டு பதிவை மேற்கொண்டார் நீதிபதி அல்லி.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் விசாரணை தொடங்காத நிலையில், அந்த வழக்கின் அடிப்படையில் பதியப்பட்டு உள்ள அமலாக்கத் துறை வழக்கில் எப்படி விசாரணையை தொடங்க முடியும் என அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என வாதிட்டார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும், இங்கு நடைபெறும் குற்றச்சாட்டு பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். இதையடுத்து நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை ஏன் நேரில் ஆஜர்ப்படுத்தவில்லை என புழல் சிறை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை ஆஜர்படுத்த இயலவில்லை என சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில்பாலாஜியை சிறைத் துறை அதிகாரிகள் இன்று (ஆக.8) நேரில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லையென்றால் காணொலி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.
செந்தில் பாலாஜி ஆஜர்: இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுக்காக ஆஜர்படுத்தப்பட்டார். புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, பலத்த பாதுகாப்புடன் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டார்.
கையில் ஊசி: செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு வந்தபோது, கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பொருத்தப்படும் ஊசியுடன் (Infusion needle set) இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்னும் முழுமையாக தேறாமல் உள்ளதால் அப்படியே அழைத்து வரப்பட்டார் செந்தில் பாலாஜி.
அமர வைத்து நீதிபதி கேள்வி: செந்தில் பாலாஜியை நாற்காலியில் அமர வைத்து, அவரிடம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டி, குற்றச்சாட்டு பதிவை மேற்கொண்டார் நீதிபதி அல்லி. அமலாக்கத் துறை சுமத்திய குற்றச்சாட்டுக்களை நீதிபதி அல்லி முதலில் ஆங்கிலத்திலும், பின் தமிழிலும் படித்து காட்டி, குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அப்போது, தன் மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் செந்தில் பாலாஜி.
தான் நிரபராதி எனவும், தனக்கு எதிரான இந்த வழக்கு, புனையப்பட்ட வழக்கு எனவும் தெரிவித்தார். மேலும், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை எனவும், அரசியல் காழ்புணர்ச்சியால் காரணமாக தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், தான் குற்றவாளி அல்ல எனவும் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.
54வது முறையாக காவல் நீட்டிப்பு: மேலும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சாட்சிகள் விசாரணைக்காக வழக்கை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். இதன்மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 54 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications