3 முறை சம்மன்.. செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்கின் வழக்கறிஞர் ஐடி முன் ஆஜராகி விளக்கம்
சென்னை: செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் நெரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், அசோக் குமார் இதுவரை ஆஜராகவில்லை. இந்த நிலையில், அவரது வழக்கறிஞர் வருமான வரித்துறை முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சென்னை, கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் மொத்தம் 40-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. கரூரில் அசோக் வீட்டில் சோதனை நடத்த சென்றவர்களை அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்து தாக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அசோக் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். ஒருவாரத்திற்கும் மேலாக இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கட்டுக்கட்டாக பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அசோக்கிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக 2 முறை அசோக்கிற்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அசோக் அதனை கண்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். மேலும் அவர் எங்கு இருக்கிறார்? என்ற தகவலும் தெரியாத நிலை உள்ளது
இதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை சார்பில் அசோக்கிற்கு 3-வது முறையாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் வரும் 27 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த முறையும் அசோக் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கையை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அசோக் குமார் தரப்பில் அவரது வழக்கறிஞர் வருமான வரித்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்ததாகவும் அசோக் குமார் விரைவில் வருமான வரித்துறை முன்பாக ஆஜராக உள்ளதாகவும் உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு அசோக்குமார் ஆஜராகாத நிலையில், அவர் தரப்பில் வக்கீல் ஆஜராகியுள்ளார் .












Click it and Unblock the Notifications