மாம்பழம் சின்னம் விவகாரத்தில் ராமதாஸுக்கு பெரும் பின்னடைவு.. அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு!
சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
பாமகவில் பாமக நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இந்த நிலையில் உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, கட்சி பிரச்சனை முடிந்தபிறகே சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு தெரிவித்தது. பாமக எங்களிடம் இருக்கும்போது சின்னத்தை முடக்க கோருவது ஏற்புடையதல்ல என அன்புமணி தரப்பு தெரிவித்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.
அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நேற்று முறையிடப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள் முருகன் அமர்வில் இன்று மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. தங்கள் வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனு எண்ணிடப்படாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும், எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு பரிசீலனை நேற்று நடைபெற்ற நிலையில், நாளை வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், ராமதாஸின் கோரிக்கை மறுக்கப்பட்டது அவரது தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications