பாலியல் தொல்லையா?.. உடனே புகார் கொடுங்க.. மாணவிகளுக்காக உதவி எண்ணை அறிவித்த பள்ளி கல்வி துறை
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் மாணவிகள் 14417 என்ற இலவச எண்ணில் உதவி மையத்தை உடனடியாக அழைத்து உடனடியாகப் புகார் அளிக்கலாம் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவிகள், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளிலேயே மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்படும் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது. அந்த சம்பவம் ஓய்வதற்குள்ளேயே திண்டுக்கல்லில் இளம்பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என நாள்தோறும் பாலியல் வன்கொடுமைகள், சீண்டல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், மது போதை பழக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதுபோன்ற பெண்களுக்கு எதிரான செயல்களுக்கான காரணங்கள் என்று கூறி அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் நடைபெற்றன. இதுதொடர்பான வழக்கில் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியில் 13 வயது மாணவியை ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, 3 ஆசிரியர்களும் போக்சோவில் கைதாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் அதுசார்ந்த ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பிரச்சனைகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளிகளில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் 14417 என்ற எண்ணில் உதவி மையத்தை உடனடியாக அழைத்து புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல்கள் போன்ற பாதுகாப்பற்ற சூழல் நிலவினால் உடனடியாக உதவி மையத்துக்கு அழைக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications