விடிய விடிய பெட்ரூமில்.. துடித்த உத்ரா.. வேடிக்கை பார்த்த புருஷன்.. 2020ஐ அலற விட்ட "பாம்பு மரணம்" !
மனைவி மீது பாம்பை ஏவி கொன்றுள்ளார் கேரள கணவன்
சென்னை: இந்த வருடம் நடந்த மிக கொடுமையான கொலைகளில் ஒன்றுதான் அப்பாவி பெண் உத்ராவின் மரணம்.. கேரள மாநிலத்தில் நடந்த சம்பவமாக இருந்தாலும் ஒட்டுமொத்த மக்களையும் உறைய வைத்த பச்சை படுகொலை இது!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா.. வாய் பேச முடியாதவர்.. 25 வயதாகிறது.. கல்யாணம் ஆகி ஒரு வயதில் மகன் உள்ள நிலையில், இவர் திடீரென பாம்பு கடித்து உயிரிழந்துவிட்டார்.
எனினும், உத்ராவின் குடும்பத்தினர் இது சம்பந்தமாக போலீசில் புகார் தந்து, மரணத்துக்கு காரணம் உத்ராவின் கணவர் சூரஜ்தான் என்றும், சொத்துக்காக இந்த கொலை நடந்துள்ளது என்றும் அடித்து சொன்னார்கள்.
பாம்பு
இதையடுத்து விசாரணை ஆரம்பமானது.. அப்போது போலீசார் பல தகவல்களை வெளிக் கொண்டு வந்தனர்.. கடந்த மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்துள்ளது.. அவரை மீட்ட பெற்றோர், சிகிச்சை தந்து, தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து வந்தனர்.
சந்தேகம்
அந்த வீட்டுக்கு மே 7 ந்தேதி சூரஜ் சென்றிருக்கிறார். அவர் சென்ற அன்றே மறுபடியும் உத்ராவை பாம்பு கடித்துள்ளது.. உத்ராவின் அலறல் கேட்டு பெற்றோர் ஓடிவந்து பார்க்கும்போது, சூரஜ் அந்த பாம்பை ஒரு பைக்குள் போட்டு வெளியே கொண்டு போயுள்ளார்.. அப்போதே அவர்மீது சந்தேகம் வலுத்தது. சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார்..
யூடியூப்
உத்ராவை கொலை செய்வதற்காக கூகுளில் பாம்புகளை தேடி உள்ளார்... பிறகு பாம்பு பிடிப்பவர்கள் யார், யார் என்று யூடியூப் வீடியோக்களில் தேடி, இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் என்பவரிடம் 10 ஆயிரம் கொடுத்து விஷ பாம்பை வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.. அங்கு பெட்ரூமில் உத்ரா தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார்.. 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது... படுக்கையிலேயே உயிர் பிரிந்துவிட்டது.
பாயாசம்
முதல்முறை போல இந்த முறை உத்ரா பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக அன்றைய இரவு உத்ராவுக்கு பாயாசம் தந்திருக்கிறார்.. ஆப்பிள் ஜூஸும் தந்திருக்கிறார்.. இவைகள் இரண்டிலுமே தூக்கமாத்திரையை கலந்து தந்திருக்கிறார் சூரஜ்... இதை குடித்து தூங்கிவிட்டதும்தான், பாம்பை கடிக்க வைத்தாராம் சூரஜ்.. கொடிய வகை பாம்பு என்பதால், அதன் வலியும் மிக கடுமையாக இருந்திருக்கிறது.. இதற்கு பிறகு உத்ரா மீது ஏவப்பட்ட பாம்பை எடுத்து போய், வீட்டுக்கு பின்பக்கம் புதைத்து வைத்திருந்தார் சூரஜ்.
போஸ்ட் மார்ட்டம்
இதையடுத்து அந்த பாம்பு தோண்டி எடுக்கப்பட்டு போஸ்ட் மார்ட்டமும் நடத்தப்பட்டது. முதல்முறையாக ஒரு பாம்புக்கு போஸ்ட் மார்ட்டம் நடந்தது இந்த வழக்கில்தான்! இது எல்லாவற்றிற்கும் காரணம் வரதட்சணைதான்.. கல்யாணத்துக்கு 100 சவரன் நகைகள், ரூ.5 லட்சம் என வரதட்சனை தந்தபோதும், இன்னும் வரதட்சனை கேட்டு உத்ராவை சூரஜ் கொடுமைப்படுத்தி வந்தார்.. கொலை செய்வதற்கு கொஞ்ச நாள் முன்புதான், உத்ரா பெயரில் சூரஜ் இன்சூரன்ஸ் செய்துள்ளார்... இந்த இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காகவே உத்ராவை கொன்றுள்ளதாக போலீசில் வாக்குமூலமும் தந்தார்.