7,400 பேர் தலையில் விழுந்த இடி.. எஸ்ஐ தேர்வு முடிவுகள் திடீரென நிறுத்தி வைப்பு! காரணம் என்ன?
சென்னை: தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் (Sub Inspector - SI) பணிகளுக்கான தேர்வு முடிவுகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள், மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப பிழை காரணமாக தற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) அறிவித்துள்ளது. தவறுகள் சரி செய்யப்பட்ட பிறகு, புதிய தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, மொத்தம் 1,299 எஸ்.ஐ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களாக தேர்வர்கள் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான tnusrb.tn.gov.in-ல் வெளியிடப்பட்டன.

எஸ்ஐ தேர்வு
வெளியிடப்பட்ட பட்டியலின்படி, ஒரு காலிப் பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் மொத்தம் 7,414 பேர் உடல் தகுதி தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. உடல் தகுதி தேர்வைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.
உடல் தகுதி தேர்வு
எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று கட்டங்களின் அடிப்படையில் இறுதி மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் பின்னர் மருத்துவ சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு எஸ்.ஐ பணிக்கான பணி ஆணை வழங்கப்படும் எனவும் விளக்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எஸ்ஐ தேர்வு முடிவுகள் நிறுத்தம்
இந்த நிலையில், வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக மென்பொருள் பிழை காரணமாக மதிப்பெண் கணக்கீடு மற்றும் தேர்வாளர் பட்டியலில் தவறுகள் ஏற்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட முடிவுகள் முழுமையாக திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
இதனால் தேர்வர்கள் மத்தியில் குழப்பமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தேர்வாணையம் தரப்பில் இருந்து "தவறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, முழுமையான மற்றும் வெளிப்படையான முறையில் புதிய தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்" என உறுதியளிக்கப்பட்டுள்ளது. புதிய முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்து தனியாக அறிவிக்கப்படும் என்றும், தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அறிவிப்புகளை மட்டும் நம்ப வேண்டும் என்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications