திருநங்கை கொலையில் அதிர்ச்சி ‘ட்விஸ்ட்’.. உடன் இருந்த தோழிகளே கொன்ற சம்பவம்! வெளிவந்த ஷாக் காரணம்!
சென்னை: சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் அண்மையில் திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அதிர்ச்சி திருப்பம் நடந்துள்ளது. அவருடன் நன்கு பழகியே திருநங்கைகளே அவரை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தவர் சிமி என்கிற சாதனா (21). திருநங்கையான இவர், கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி இரவு வீட்டை விட்டுச் சென்ற நிலையில், அப்போது முதல் அவரைக் காணவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சிமியின் பெற்றோர் அவரைத் தேடி வந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் சிமியைக் கண்டுபிடித்துத் தருமாறு பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் சிமியின் தாயார் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி பகுதியில் முட்புதரில் அழுகிய நிலையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சிமியின் பெற்றோரை வரவழைத்து அடையாளம் காட்டச் செய்தனர். அவர் சிமி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதில் சிமி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, திருநங்கை சிமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சிமி உடல் கிடந்த பகுதியில் இருந்து நான்கு திருநங்கைகள் ஓடும் காட்சி பதிவாகியிருந்தது. அவர்கள் யார் என்று போலீசார் விசாரித்து வந்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருந்த அவர்களை போலீசார் விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திருநங்கை சிமி உடன் அபர்ணா(27), ஆனந்தி (35), ரதி (36), அபி (32) ஆகிய நான்கு திருநங்கைகளுக்கும் இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவர்களில் சிமியை மட்டும் சில வாடிக்கையாளர்கள் விரும்பி அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் சிமிக்கும் மற்ற திருநங்கைகளுக்கும் இடையே கேலி கிண்டல், வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
சம்பவம் நடந்த அன்றும் சிமி உடன் மற்ற 4 திருநங்கைகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மற்ற நால்வரும் சிமியை கொடூரமாக தாக்கி கொலை செய்து, முட்புதரில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். தொழில் போட்டி காரணமாக சிமியை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications