தீவிரம் காட்டும் ஓபிஎஸ்.. முக்கிய தலைகளுடன் நடந்த "மீட்டிங்".. அதிமுக அலுவலகத்தில் என்ன நடந்தது?
சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையற்றது என தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் உடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து தலைமை கழக நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். 11 பேர் கொண்ட இந்த குழு ஆலோசனை நடத்திய நிலையில், திடீரென அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் புறப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை வரவேற்க தலைமை அலுவலகம் முன்பு திரண்டனர். இதையடுத்து தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் இருந்த சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் வளர்மதி ஆகியோர் புறப்பட்டனர்.

அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஜெயக்குமார் கார் தாக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சென்னையில் உள்ள வீட்டில் இருந்து ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டபோது, தொண்டர்கள் நினைப்பதே நடக்கும் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ்-க்கு அவரது ஆதரவாளர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கட்சி அலுவலகத்திற்குள் சென்ற ஓபிஎஸ், ஆதரவாளர்களான பொன்னையன், வைகைச்செல்வன் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையின் போது, வைத்திலிங்கம், செம்மலை, ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இருந்தனர்.
சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், கட்சியின் நிலைப்பாடே தனது நிலைப்பாடு. அதிமுகவில் எந்தப் பிளவும் இல்லை. நகமும், சதையும் போல் அதிமுக ஒற்றுமையாக உள்ளது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையற்றது. திட்டமிட்டபடி வரும் ஜூன் 23ல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதேபோல் வைகைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓபிஎஸ் வருகைக்கும், நிர்வாகிகள் வெளியேறியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசினோ. அனைத்து விஷயங்களையும் கூறிட முடியாது என்று தெரிவித்தார்.
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அதிமுகவின் ஒற்றைத் தலைமையே என்று ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications