ஷாக்கிங்.. பாஜகவில் சேர.. கத்தி அரிவாளுடன் வந்த ரவுடி கும்பல்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
சென்னை பாஜக கூட்டத்தில் 6 பேர் கத்தியுடன் பிடிபட்டுள்ளனர்
சென்னை: கையில் கத்தி, அரிவாளுடன் பாஜகவில் இணைய வந்த ரவுடி கும்பலை சென்னை போலீசார் கைது செய்து, தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே பாஜக சார்பில் மக்களுக்கு நலதிட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், கே.டி.ராகவன், மாவட்ட செயலாளர் பலராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் கூட்டம் நடந்து வருகிறது.. இதில் கட்சி நிர்வாகிகளுடன், கூட்டத்தில் 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சுற்றி திரிவதாகவும், அவர்கள் கைகளில் பட்டா கத்திகள் வைத்திருந்ததாகவும் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதனை அறிந்த ஓட்டேரி போலீசார் ரகசியமாக கண்காணித்து 6 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.. அவர்களை பரிசோதித்தபோது அவர்களிடம் கத்தி இருந்தது தெரிய வந்தது.
இவர்கள் எதற்காக கத்தியுடன் வந்தார்கள் என்று தெரியவில்லை.. ஒரு மாநில தலைவர் கூட்டத்திலேயே இப்படி ஒரு நிகழ்வா என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நபர்களைப் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸாருடன் சில பாஜகவினர் வாக்குவாதமும் செய்துள்ளனர். இது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்தது.
Recommended Video
இந்த 6 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த 6 பேரும் கட்சியில் இணைய வந்தார்களா? அல்லது கொலை செய்யும் நோக்கில் கூட்டத்தில் கலந்து கொண்டார்களா என்ற பல கோணங்களில் விசாராணை நடந்தது.
அந்த விசாரணையில் இவர்கள் அனைவரும் பிரபல ரவுடி சூர்யாவின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது.. போலீசாரிடம் அவர்கள் சொல்லும்போது, "நாங்க பாஜகவில் சேர வந்தோம்.. நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் போலீசார் அதிகமாக இருந்தால், பயந்து கொண்டு அங்கே போகவில்லை" என்று தெரிவித்தனர். இவர்களுடன் ரவுடி சூர்யாவும் அங்கு வந்திருக்கிறார்.. ஆனால் அவர் மட்டும் தப்பிவிட, மற்ற கூட்டாளிகள் போலீசில் சிக்கி இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷன் முன்பு பாஜக கட்சியினர் திரண்டுவிட்டனர்.. கட்சியில் சேர வந்தவர்களை எதற்காக கைது செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இப்படித்தான், 2 மாதத்துக்கு முன்பு, தஞ்சாவூரில் உள்ள மடத்துக்கு சொந்தமான கடையை காலி செய்ய சொன்ன மேனேஜரை பாஜக நகர தலைவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாநிலத் தலைவரின் கூட்டத்துக்கு வந்திருந்த பாஜகவினர் சிலர் கத்தியுடன் காணப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications