சென்னையில் களமிறக்கப்படும் "ஆபரேஷன் எப்எஸ்ஐ".. மான்ஹாட்டன் போல மாறும் மவுண்ட் ரோடு! சுவாரசிய பின்னணி
சென்னை: சென்னையில் இருக்கும் முக்கியமான சாலைகளை மொத்தமாக மாற்றும் விதத்தில் புதிய எப்.எஸ்.ஐ விதிகளை கொண்டு வர மாநகராட்சி ஆலோசனை செய்து வருவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முழுக்க பல நாடுகளின் தலைநகரங்களில் வானுயர கட்டிடங்கள் இருக்கும். ஏன் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள இலங்கையின் தலைநகர் கொழும்பில் கூட வானுயர கட்டிடங்கள் உள்ளன.
இந்தியாவிலும் மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் சில வானுயுர கட்டிடங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் அப்படி பெரிய கட்டிடங்கள் அதிகம் இல்லை.

சென்னையில் வர போகிறது
சென்னையில் பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ஐடி பார்க்குகள் இருந்தாலும், இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் கிடைமட்டமாக நீண்டு காணப்படும். அதாவது நீளமாக இருக்குமே தவிர உயரமாக இருக்காது. சென்னையில் உயரமாக இருக்கும் கட்டிடங்களும் கூட பெரும்பாலும் மக்கள் வசிக்கும் அப்பார்ட்மென்டுகள்தான். இந்த நிலையில்தான் சென்னையில் முக்கியமான சாலைகளில் உயரமான கட்டிடங்களை காட்டும் வகையில் எப்.எஸ்.ஐ விதிகள் மாற்றப்பட உள்ளன.

எப்எஸ்ஐ என்றால் என்ன?
எப். எஸ். ஐ என்பது Floor a Space Index ஆகும். அதாவது ஒரு நிலப்பரப்பில் எப்படி கட்டிடம் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடும் மதிப்பீடு ஆகும். ஒரு குறிப்பிட்ட நிலத்தில் எவ்வளவு உயரத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும், எவ்வளவு floor இருக்க வேண்டும் என்பதை இந்த மதிப்பு குறிக்கும். அதிக Floor a Space Index மதிப்பு இருந்தால், அதிக தளங்களை ஒரு பகுதியில் கட்ட முடியும். அமெரிக்கா, சிங்கப்பூரில் இதன் மதிப்பு 10-20 வரை இருக்கும் என்பதால் அங்கு அதிக உயரத்தில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இந்தியாவில் இதன் மதிப்பு சராசரியாக 2-3 மட்டுமே உள்ளது.

எவ்வளவு அதிகரிப்பு
இந்த நிலையில்தான் சென்னையில் தற்போது இருக்கும் எப்எஸ்ஐ மதிப்பான 3.25 புதிய மதிப்பான 4.875 மாற்றப்பட உள்ளதாம். குறிப்பிட்ட சில சாலைகளில் இலவச எப்எஸ்ஐ மதிப்பு 6-8 வரை உயர்த்தப்பட உள்ளது. இதன் அர்த்தம் தற்போது இருக்கும் கட்டிடங்கள் அதன் உயரத்தை இரண்டு மடங்கு கூட அதிகரிக்க முடியும். அதாவது 6 அடுக்கு கட்டிடங்கள் 12 அடுக்கு கட்டிடமாக உயர்த்த முடியும். சென்னையில் பல முக்கிய சாலைகளில் இந்த புதிய எப்எஸ்ஐ விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாம்.

எங்கு எல்லாம்?
அதன்படி அண்ணாசாலை, பெரியார் சாலை, ராஜிவ் காந்தி சாலை, ஓஎம்ஆர் சாலை, சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலை, சென்னை திருவள்ளூர் சாலை, மற்ற பெரிய சாலைகளில் இலவச எப்எஸ்ஐ மதிப்பு 6-8 வரை உயர்த்தப்பட உள்ளது. இதனால் அங்கு பல மாடி கட்டிடங்களை கட்ட முடியும். ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களை உயர்த்த முடியும். இதற்கு பெரிதாக அனுமதி வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. புதிய விதி விரைவில் அமலுக்கு வர உள்ளது.

மான்ஹாட்டன் போல மாறும்
இதன் காரணமாக சென்னை மவுண்ட் ரோடு மான்ஹாட்டன் போல மாறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கிடைமட்டமாக கட்டிடங்கள் கட்டுவதால் போதிய இடங்கள் இல்லை. இப்படி உயரமாக கட்டினால் நிறைய இடம் கிடைக்கும். சாலையும் பெரிதாக்கப்படும் என்று கூறி உள்ளனர். முக்கியமாக ஸ்பென்சர் பிளாசா போன்ற 8 மாடி கட்டிடங்கள் 16 மாடி கட்டிடங்களாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

நல்ல விஷயம்
பெங்களூரில் இந்த மதிப்பு 4 என்ற அளவில் உள்ளது. அதைவிட அதிகமாக சென்னையில் அனுமதிக்கப்பட உள்ளதால் கட்டிடங்கள் அதிக உயரத்திற்கு எழுப்பப்படும். கீழேயே பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும் என்பதால், சாலைகளில் இடநெருக்கடி வெகுவாக குறையும் என்று மாநகராட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றன. இதனால் கிடைக்கும் இடவசதி புதிய லேன்களை சாலைகளில் உருவாக்க பயன்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications