நூற்றாண்டு பாரம்பரியம்... தமிழகத்தின் பழமையான மெடிக்கல்... ஆங்கிலேயரிடமிருந்து கை மாறிய கதை..!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே தமிழகத்தின் பழமையான மருந்தகம் நூற்றாண்டு பாரம்பரியத்துடன் இயங்கி வருகிறது.
இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த ஸ்மித் மற்றும் ஸ்டாக்கிங் என்ற இரண்டு ஆங்கிலேயர்களால் கடந்த 1913-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மெடிக்கல் அதற்கு பிறகு இரண்டு பேருக்கு கைமாறியுள்ளது.
ஆனால் மருந்தகம் தொடங்கப்பட்ட இடமோ, பெயரோ இதுவரை மாற்றப்படவில்லை என்பதே இதன் தனிச்சிறப்பு.

சென்னை
ஆதிகாலத்து சென்னையை பொறுத்தவரை வர்த்தக சாம்ராஜ்யத்திற்கு பெயர் பெற்ற இடம் பாரீஸ் கார்னர். அந்தப் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் பெரும்பாலானவை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டவை. இன்றும் நீங்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல நேரிட்டால் பிரிட்டிஷார் கட்டிடம் அந்தக் கட்டிடத்தில் ஆங்கிலேயேர் ஒருவரின் பெயரும் பொறிக்கப்பட்டிருப்பதை சாதாரணமாக காண முடியும்.

ஸ்மித் -ஸ்டாக்கிங்
இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு வந்த ஸ்மித் மற்றும் ஸ்டாக்கிங் என்ற இரண்டு ஆங்கிலேயர்கள் ஸ்மித் ஸ்டாக்கிங் அண்ட் கோ என்ற பெயரில் 1913-ம் ஆண்டு மெடிக்கல் தொடங்கியுள்ளனர். இருவரும் மருந்தகத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் ஒரு கட்டத்தில் மெடிக்கலை விற்க முன்வந்த போது அதனை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குண்டூர் நரசிம்மராவ் என்பவர் வாங்கியிருக்கிறார்.

குண்டூர் நரசிம்மராவ்
மருந்தகத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத குண்டூர் நரசிம்மராவால் இந்த மெடிக்கலை தொடர்ந்து நடத்த முடியவில்லை. 1958-ம் ஆண்டு மருந்தகத்தை மூடிவிடலாம் என அவர் எண்ணிய நிலையில், கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த மொய்தீன் என்பவர் விலைக்கு வாங்கியிருக்கிறார். அப்போது முதல் இன்று வரை மொய்தீன் குடும்பத்தினர் தான் தமிழகத்தின் இந்த பழமையான மருந்தகத்தை நடத்தி வருகின்றனர்.

இன்சுலின் மருந்து
இதனிடையே இது குறித்து நம்மிடம் பேசிய, ஸ்மித் ஸ்டாக்கிங் மருந்தகம் உரிமையாளர் சித்தீக், '' தமிழகத்தின் பழமையான மெடிக்கலை நிர்வகிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். எனது தந்தை காலத்துக்கு பிறகு நான் தான் இதை நடத்தி வருகிறேன். 1950 களில் இன்சுலின் மருந்து அபூர்வமாக பார்க்கப்படும் . ஆனால் அப்போதே அந்த மருந்தை தருவித்து கொடுத்தவர் எனது தந்தை மொய்தீன்.'' என தங்கள் பெருமைகளை பதிவு செய்தார்.
மூன்று நாட்களில் லாபம் இல்லை எனக் கூறி கடைக்கு மூடுவிழா நடத்தப்படும் காலத்தில் 108 ஆண்டுகள் ஒரு கடை தொடர்ந்து இயங்கி வருவது காலத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications