காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!
சென்னை: வாய்ப்பு இருந்தும், ராஜ்யசபா சீட்டை காங்கிரஸுக்கு கொடுத்திருக்கிறது தவெக. இதற்கு பின்னால் மிகப்பெரிய காரணம் இருப்பதாக திமுகவினர் சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர்.
அதிமுக சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சி.வி.சண்முகம், சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்திருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது என்பதால், அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

எனவே, தமிழகத்தில் அந்த ஒரு பதவிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தவெக மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதால் எளிதாக எம்பி சீட்டை ஜெயித்துவிடலாம். இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு சீட்டை விட்டு கொடுத்திருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற முடியாத நிலையில் இருந்த போது, திமுக உடனான கூட்டணியை உடைத்துக்கொண்டு வந்து தவெகவுக்கு காங்கிரஸ் ஓடி வந்து ஆதரவு கொடுத்தது. இதனையடுத்துதான் இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக கட்சிகள் ஆதரவு கொடுத்தன. இந்த ஆதரவின் அடிப்படையில்தான் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த ஆதரவுக்கு கைமாறாக 2 அமைச்சர் பதவி மற்றும் ஒரு எம்பி பதவியை தருவதாக தவெக வாக்கு கொடுத்திருந்தது. அதன்படியே 2 அமைச்சர் பதவி காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், எம்பி பதவியை எப்போது தருவோம் என்று தவெக குறிப்பிடவில்லை. எனவே இப்போது வரும் இடைத்தேர்தலை பயன்படுத்தி தவெகவை தேசிய அளவில் கொண்டு சேர்க்க விஜய் முயற்சித்திருக்கலாம். அது இல்லாமல், காங்கிரஸ் கட்சிக்கு எம்பி பதவியை விட்டுக்கொடுத்திருக்கிறது கட்சி தலைமை.
ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியால்தான் இந்த சீட்டை விட்டுக்கொடுத்திருப்பதாக தவெகவினர் சொன்னாலும், இதில் சந்தேகம் இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.
அதாவது, "தங்களுக்குச் சேர வேண்டிய மாநிலங்களவைத் உறுப்பினர் பதவியை ஏற்காமல், முதல் ராஜ்யசபா சீட்டை ஒரு கூட்டணி கட்சிக்கு வழங்குவது தாராள மனப்பான்மை அல்ல. மாறாக,பாஜக அரசின் கொள்கைகள்/அரசியல் நிலைப்பாடு தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கான ஒரு தப்பித்தல்வாத வழி முறை" என்று திமுக முன்னாள் எம்பியான செந்தில்குமார் கூறியிருக்கிறார்.
தேசிய அரசிலுக்குள் நுழைந்தால் பாஜகவை எதிர்க்காமல் இருக்க முடியாது. இப்போதைக்கு அது தேவையில்லை என்று கருதியே, தவெக இதை காங்கிரஸ் பக்கம் தள்ளிவிட்டிருக்கிறது என்றும் திமுகவினர் சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications