”இஸ்லாமியர் என்றால் தேசத்துரோகி.. சீக்கியர் என்றால் காலிஸ்தானியா” அர்ஷ்தீப்-க்கு குவியும் ஆதரவு!
சென்னை: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும், சிறுபான்மை சமூக வீரர்கள் மதவெறியர்களின் இலக்காக மாறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே துபாயில் நடந்த சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது.
182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிஸ்வான் 71 ரன்களை குவித்தார். 4ம் வரிசையில் இறங்கிய முகமது நவாஸ், 20 பந்தில் 42 ரன்களை விளாசினார். இதையடுத்து கடைசி ஓவரில் இலக்கை அடித்து பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஈகோ பிரச்சனை.. இவரை முதல்ல தூக்குங்க.. மூத்த வீரருக்கு எதிராக "பிரஷர்".. தமிழருக்கு அடிக்கும் லக்!
அர்ஷ்தீப் சிங் கேட்ச் மிஸ்
பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது ரவி பிஷ்னோய் வீசிய 18வது ஓவரின் 3வது பந்தில் ஆசிஃப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார் . ஷார்ட் தேர்டு மேன் திசையில் நின்றிருந்த அர்ஷ்தீப் சிங், மிகவும் எளிமையான கேட்ச்சை தவறவிட்டார். இந்த நிலையில் அர்ஷ்தீப் கோட்டைவிட்ட கேட்ச் தான் ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிட்டதாக விமர்சித்தனர்.
அன்று தேசத்துரோகி ’ஷமி’
ஆனால் பிரிவினையை ஏற்படுத்த விரும்பும் சிலர், அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தானி என்று விமர்சித்து வருகின்றனர். உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு முகமது ஷமி மற்றும் இஸ்லாமியர்களை குறிவைத்து தேசத்துரோகி என்று விமர்சித்தனர். தற்போது சீக்கியரான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தானி என்று விமர்சித்து வருகின்றனர்.
காலிஸ்தானி அர்ஷ்தீப்
ஆனால் இப்படி விமர்சிப்பவர்களுக்கு ஹர்திக் பாண்டியா மோசமாக வீசியதும், ரிஷப் பன்ட் தவறான நேரத்தில் ஆட்டமிழந்ததும் கண்களுக்கு தெரிவதில்லை. ஒவ்வொரு முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடையும் போது, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இந்திய அணி வீரர் மீது சேற்றைவாரி வீசுவது ரசிகர்களின் செயலாக தொடர்ந்து வருகிறது.
ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்
ஆனால் உண்மையான கிரிக்கெட் நேசிக்கும் ரசிகர்கள் இந்திய அணி ஒட்டுமொத்தமாக செய்த தவறை சுட்டுக்காட்டி அனைத்து வீரர்களையும் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் 23 வயதாகும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசுவதாகவும், வரும் காலங்களில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத இடதுகை பந்துவீச்சாளராகவும் வருவார் என்று ட்விட்டரில் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தானி என்று விமர்சிப்பவர்களுக்கு, பதிலடியையும் கொடுத்து வருகின்றனர்.