“அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்.. பேச்சுவார்த்தை நடக்கிறது” - எடப்பாடி பழனிசாமி
சென்னை: "சில கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று சொன்னேன்.. வந்தாச்சு.. இன்னும் சில கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.. வருவதற்கு வாய்ப்பு உள்ளது" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக, பாஜக, அமமுக, தமாகா, அன்புமணி தலைமையிலான பாமக, ஐஜேகே, தமமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். தேமுதிக, திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் பேசி வருவதாக கூறப்படுகிறது. அக்கட்சி எந்தக் கூட்டணியில் இணையும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "2026 சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். சில கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று சொன்னேன்; வந்தாச்சு.. இன்னும் சில கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது; வருவதற்கு வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடந்த கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக ஒரு வலிமையான இயக்கம். தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அதிமுக அரசு துணை நின்றது.
இங்கு மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தது. அப்போது விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். ஆனால் இந்த திட்டங்களை எனது தலைமையிலான அதிமுக அரசு தடுத்து நிறுத்தியதோடு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு உற்ற தோழனாக இருந்து காப்பாற்றியது அதிமுக அரசு. விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், விலையில்லா ஆடு, மாடுகள் கொடுத்து உதவினோம்.
திமுக ஒரு குடும்ப கட்சி. ஆனால் அதிமுக தொண்டர்களுக்கான கட்சி. இங்கு கடைகோடி தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வர முடியும். எத்தனையோ சோதனைகளை எல்லாம் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சாதனைகளாக மாற்றினார்கள். கொரோனா காலக்கட்டத்தில் நிதிநெருக்கடியிலும் விலைவாசி உயரவில்லை. அப்போது தமிழக அரசுக்கு வரி வருவாய் கிடையாது. இருப்பினும் சிறப்பான நிர்வாக திறமையால் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications