எடப்பாடி பற்றி பேச வேண்டாம்.. பேரம் பேச வந்தார்கள்.. கனகராஜ் சகோதரர் தனபால் பேட்டி
சென்னை: உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும். பணம் நாங்கள் கொடுக்கிறோம்.. நடந்தது நடந்துவிட்டது. அண்ணனை காட்டிக்கொடுக்காதீங்க.. இவ்வாறு நேற்று காலை தன்னிடம் பேரம் பேசியதாக கனகராஜ் சகோதரர் தனபால் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. மேலும் அங்கிருந்த முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இதுமட்டுமின்றி அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இதேபோல் கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி கோடநாடு வழக்கோடு சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஜாமீனில் வெளி வந்த தனபால், அண்மையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது "என்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் கோடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு வழக்கில் ஏற்கனவே 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கும் தனபால் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், தனபாலிடம் மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உதகை நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு தயாராக இருப்பதாக கூறிய கார் ஓட்டுநர் கனராஜ்ஜின் சகோதர் தனபால், நேற்று காலை 5 மணிக்கு என்னிடம் பேரம் பேச வந்தார்கள் என்று கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:- கோட நாடு கொலை வழக்கில் இதுவரை என்ன விசாரணை நடந்துள்ளது. 7 வருடமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன். என்னை சிபிஐ விசாரிக்கட்டும்.
சம்பவம் நடந்த சமயத்தில், என்னை விசாரிப்பதற்காக வந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் என்னை தனியாக அழைத்து அந்த 2 செல்போனை எங்க சார் என்று கேட்டாங்க.. நான் காரில் வைத்திருந்த அந்த 2 செல்போன்களையும் எடுத்து அவரிடம் கொடுத்தேன். விசாரணை அதிகாரி சுதாகர் மற்றும் சேலம் எஸ்பி ஆகிய 2 பேரும் எடப்பாடி பழனிசாமிக்கு விலை போய்விட்டனர்.
சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஏடிஜிபி கிருஷ்ணமூர்த்தியும், சுதாகர் சாரும் என்னையும் என் தம்பியையும் அழைத்து வந்தாங்க.. அதுவரைக்கும் தான் எனக்கு தெரியும். ஊசி போட்டாங்க.. மாத்திரை கொடுத்தாங்க.. ஊட்டியில் வண்டி ஏறுகிற வரைக்கும் எனக்கு சுயநினைவே இல்லை... அப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை.. என்னை அடித்து துன்புறுத்தினர். ஆடை இல்லாமல் உட்காற வைக்க வேண்டும் என்றார்கள்.. என்னோட வெயிட் 80 கிலோ இருந்தது. .இப்போது 65 கிலோ இருக்கேன்.. என்றார்.
நீங்கள் ஏன் எடப்பாடி பழனிசாமி மீது ஏன் நேரடியாக புகார் கொடுக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:- அண்ணனை காட்டிக்கொடுக்க கூடாது என்று என் மனைவி மூலம் பேரம் பேசுகின்றனர். நேற்று காலை 5 மணிக்கு வந்தார்கள்.. வெளியே வந்து பார்த்தபோது கோனார்புரத்தை சேர்ந்த முக்கிய புள்ளி.. என்னிடம் பேரம் பேசினார். பேரம் பேசுவதாக இருந்தால் வராதீர்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.
என்ன பேரம் பேசினார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த தனபால், "உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும். பணம் நாங்கள் கொடுக்கிறோம்.. அண்ணன் வந்து கேட்டுக்கொண்டு வர சொல்லியிருக்கிறார். நடந்தது நடந்துவிட்டது. அண்ணனை காட்டிக்கொடுக்காதீங்க.. இப்படி தான் பேரம் பேசினர். வந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.. எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையான தைரியம் இருந்தால் என்னை நேரடியாக நெஞ்சிலன் மேல் குத்த சொல்லுங்க.. முதுகில் குத்த வேண்டாம்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications