திமுக கொடி கட்டிய காரில் அராஜகம்.. கம்ப்ளைண்ட் கொடுத்தா போலீசே மிரட்டுறாங்க! அதிமுக பகீர் புகார்..!
சென்னை: திமுக கொடி கட்டிய காரில் சாலையில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டதோடு பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ கொடுத்து புகார் கொடுத்தும், புகார் கொடுத்தவர்களையே காவல்துறை மிரட்டுவதாக அதிமுக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது
ரீல்ஸில் மாஸ் காட்டுகிறேன் என்ற பெயரில், இன்ஸ்டா மற்றும் ஃபேஸ்புக்கில் அற்ப சந்தோஷத்திற்காகவும், ஒரு சில லைக்குகளுக்காகவும் ரீல்ஸ் என்ற பெயரில் அட்டகாசம் செய்து வருகின்றனர் சில பொறுப்பற்ற இளைஞர்கள்.

ஓடும் ரயில், பேருந்தில் அட்டகாசம் செய்வது, சாலைகளில் ஜிம்னாஸ்டிக் செய்வது, ப்ராங்க் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது, பட்டாக் கத்தியால் கேக் வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் மாணவிகள், இளம்பெண்கள் முன் ஜிம்னாஸ்டிக் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இது போன்ற வீடியோக்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் போது போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக கொடி கட்டிய காரில் அராஜகம் செய்த வீடியோ கொடுத்து புகார் கொடுத்தும், புகார் கொடுத்தவர்களையே காவல்துறை மிரட்டுவதாக அதிமுக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. இதுமட்டுல்லாமல் பாஜகவினரும் இதுதொடர்பாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் TN18BK6667 என்ற பதிவெண் கொண்ட திமுககொடி பொருத்திய காரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சில இளைஞர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனையடுத்து இந்த வீடியோவை அதிமுக வேலூர் புறநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் ஹேமந்த் குமார் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், ஹேமந்தை காவல்துறையினர் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு அவரது வீட்டு முகவரி போன்ற தனிநபர் விவரங்களைக் கேட்டு மிரட்டும் தொனியில் பேசி வருவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் ஐடி விங் நிர்வாகி ராஜ்சத்யன், ஹேமந்த் குமார் தன்னுடைய பதிவில் கார் எண்ணை தெளிவாக பதிவிட்டுள்ள நிலையில், காவல்துறை நியாயமாக செயல்பட்டிருந்தால் அந்த கார் உரிமையாளரை விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
மாறாக, பதிவிட்டவரை தொடர்பு கொண்டு மிரட்டல் தொனியில் பேசுவது கண்டிக்கத்தக்கது. சமூக ஊடகங்களில் யாரும் இந்த அரசையோ, ஆளுங்கட்சியின் அராஜகங்களையோ புகார் அளிக்கவே கூடாதா? காவல்துறையாக செயல்படுங்கள்- விடியா திமுக அரசின் ஏவல்துறையாக அல்ல! ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்பதை நினைவில் கொள்ளவும்! ஹேமந்த் குமாரை தொடர்பு கொண்டு, கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அச்சுறுத்தியவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது அதிமுக ஐடி விங் சார்பில் சட்ட நடவடிக்கை தொடரப்படும்.” என எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவினர் மட்டுமல்லாது பாஜகவினரும் இந்த வீடியோவை பகிர்ந்து காருக்குள் செல்போன் பேசிய டிடிஎஃப் வாசனை கைது செய்த காவல்துறையினர், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் இதுபோன்ற அராஜகம் செய்பவர்களை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications