வலுவான கூட்டணிக்கு அடித்தளம்.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியா
Recommended Video
சென்னை : மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா அடுத்த மாதம் 16-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய சூழ்நிலைகள் உருவாகி உள்ளன. பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் மிகப்பெரிய வலுவான அணியை உருவாக்க பல்வேறு கட்சி தலைவர்களும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணி கூட்டத்தை நடத்த ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு இருந்தார். ஆனால், 5 மாநில தேர்தல்கள் நடந்ததால், அடுத்த மாதத்தில் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை பா.ஜ. கவுக்கு எதிராக ஒருங்கிணைத்து அணி திரட்ட செய்யும் மிகப்பெரிய வாய்ப்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது. இதனால் தி.மு.க. தலைமையில் தேசிய அளவில் புதிய கூட்டணிக்கான அடித்தளம் அமையும் என கூறப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன.
"தலைவர் கலைஞர் அவர்களின் சிலை திறப்புவிழாவில் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் பங்கேற்பு"
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) November 29, 2018
கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு எழுதியுள்ள கடித நகல்: pic.twitter.com/uJj7JCmr4z
கடந்த ஆகஸ்டு மாதம் மறைந்த கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவின் பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்ளுமாறு சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று விழாவுக்கு வருவதாக பதில் அனுப்பியுள்ளார் சோனியா காந்தி. அதில் திமுக தலைவர் கருணாநிதி உண்மையான மண்ணின் மைந்தன். அவரது சிலை திறப்பு விழாவில் பங்கேற்பது எனக்கு பெருமை தரக் கூடியது என்று கூறியுள்ளார் சோனியா காந்தி.