"காத்திருந்து காத்திருந்து" செம அப்செட்டில் அமித்ஷா.. தொடர்ந்து சொதப்பும் ரஜினி.. அப்செட்டில் பாஜக!
சென்னை: ரஜினி மீது செம அப்செட்டில் உள்ளாராம் அமித்ஷா.. ரஜினிக்காக காத்திருந்து காத்திருந்து.. இப்போது அவரது டிராக் வேறு மாதிரியாக சென்று கொண்டிருப்பதால் பாஜகவின் தலைமையை இது அப்செட் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது!!
ரஜினிகாந்த்தை தன் பக்கம் இழுக்க என்னென்னமோ முயற்சிகளை பாஜக மேற்கொண்டது.. எத்தனையோ விதமாக கட்சிக்கு அழைப்பு விடுத்தது... பொன்.ராதாகிருஷ்ணன் முதல் தமிழிசை வரை ஓயாமல் அவரை கட்சிக்கு அழைத்து கொண்டிருந்தனர்.
விஜய் வீட்டில் நடந்த ரெய்டு சமாச்சாரத்தில் ரஜினி தரப்பில் மட்டும் கரிசனம் காட்டப்பட்டது.. மத்திய அரசின் விருதும் தரப்பட்டது.. எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினியின் சர்ச்சை பேச்சு எழும்போதெல்லாம் ஓடிவந்து முட்டு கொடுத்து கொண்டிருப்பவர் எச்.ராஜா.. இப்போது லீலா பேலசில் ரஜினிகாந்த் பேசியதுகூட சரியென்றுதான் சொல்லி ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்.
லீலா பேலஸ்
இவ்வளவும் செய்தும் ரஜினிகாந்த் தங்கள் பக்கம் வரவில்லையே என்ற ஆதங்கம் அவர்களிடம் உள்ளதாக கூறப்படுகிறது.. லீலா பேலஸ் பேட்டியை பார்த்தும்கூட, "ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஆனால் அவர் தனிக்கட்சி என்று சொல்லும்போது இந்த தருணம் சரியாக இருக்காது என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
சிஏஏ விவகாரம்
அந்த அளவுக்கு ரஜினிகாந்த் மீது நம்பிக்கை வைத்தவர்கள்.. இன்னமும் வைத்து வருபவர்கள்... ஆனால் கிருஷ்ணர் - அர்ஜுனன் என்று சொல்லும்போதுகூட ரஜினிகாந்த்துக்கு தமிழக மக்களின் மனநிலை சரியாக புரியவில்லை என்றுதான் தெரிகிறது.. இதற்கு பிறகுதான் குறிப்பாக சிஏஏ விவகாரத்தில்தான் பாஜகவுக்கு எதிரான மனநிலை எந்த அளவுக்கு தமிழகத்தில் உள்ளது என்பதை உணர்ந்தார் என்றே சொல்லலாம்.
அதிருப்தி
மத்திய அரசு மீது நேரடியாக ரஜினி குற்றச்சாட்டை சொன்னபோது, அதிலும் உள்துறையை சுட்டிக்காட்டி குறை சொன்னதுதான் முதல்முறையாக பாஜகவின் அதிருப்தி வெளிப்பட்டது.. இதைதான் அமித்ஷா எதிர்பார்க்கவில்லை என்றும் சொல்லப்பட்டு... எப்படியாவது வந்துவிடுவார் என்று காத்து, காத்து கிடந்து கடைசி வரை வராமல் போன கோபத்தில்தான் எல்.முருகனின் நியமனமும் நடந்ததாக தெரிகிறது.
எதிர்பார்ப்பு
இப்போதாவது பாஜக பக்கம் வந்துவிடுவாரா என்ற எதிர்பார்ப்புடன் பாஜக தலைமை காத்துள்ளது... இதற்கு ஒரே காரணம் அன்றைய பேட்டியில் அதிமுக, திமுகவை ரஜினிகாந்த் விமர்சித்தாரே தவிர, பாஜகவை சுட்டிக்காட்டி பேசவில்லை.. மேலும் நேற்றைய பாஜகவின் ஆதரவாளர் ரங்கராஜ் பாண்டேவின் நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.. அப்போதும் புயல், சுனாமி, மக்கள் அலை என்றாரே தவிர தெளிவான பேச்சையும், உறுதிப்பாட்டையும் எடுத்து வைக்கவில்லை. அதனால் மண்டை காய்ந்து கொண்டுள்ளதாம் பாஜக தலைமை! இருப்பினும் இன்னும் தொடர்ந்து ஒரு அதீத நம்பிக்கையில் உள்ளதாம் "அவர் வருவாரா" என்று?!!