"ட்விஸ்ட்".. இதுதான் நடக்க போகிறதா.. பாஜகவா.. கமலா.. சாய்ஸ் திமுக, அதிமுக கையில்!
பாஜக தலைமையில் 3வது அணி அமையகூடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: திமுக - அதிமுக என்ற இரு மெகா கட்சிகளிலும் கூட்டணி இன்னும் முடிவாகாத நிலைமையை பார்த்தால், 3வது அணி உருவாகுமோ என்ற சந்தேகம் தமிழக அரசியல் களத்தில் எழுந்து வருகிறது.
ஜெயலலிதா இருந்தபோதும் சரி, கலைஞர் இருந்தபோதும் சரி.. கூட்டணி விஷயத்தை முன்னதாகவே அறிவித்து விடுவார்கள்.. இவர்கள் 2 பேருமே தங்கள் தரப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனையை கேட்டு பெறுவார்கள், ஆனால் முடிவுகளை இவர்கள் தான் தன்னிச்சையாக அறிவிப்பார்கள்.
அந்த முடிவுகள் கூட்டணி உட்பட அனைவருமே ஏற்கக்கூடியதாகவே இருக்கும்.. பிரதான வெற்றி வாய்ப்பையும் இவர்களுக்கு பெற்று தரும்.. இதில் ஜெயலலிதா கொஞ்சம் அதிரடியை காட்டுவார்.. எல்லா கட்சிகளையும்விட முதல் நபராக பிரச்சாரத்திற்கே கிளம்பி விடுவார்.
நிர்ப்பந்தம்
ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.. திமுக, அதிமுக இரண்டுமே சாமர்த்தியமாக காய் நகர்த்தக்கூடிய நிர்ப்பந்தத்தில் உள்ளன.. 2 கட்சிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.. அதனால் கூட்டணி விஷயத்திலும் அவசரப்படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றன.
ராகுல் காந்தி
திமுக கூட்டணியை எடுத்து கொண்டால், ராகுல் காந்தி அடுத்தடுத்து 2 முறை தமிழகம் வந்துவிட்டு சென்றதை பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தான் இருக்கிறது என்பது ஓரளவு தெளிவாகிவிட்டது.. ஆனால், விசிக, மதிமுக இரண்டுமே சின்னம் பிரச்சனையில் சிக்கி கொண்டு, எந்த முடிவையும் எடுக்க முடியாமல் உள்ளன.. தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது என்ற உணர்வுகளில் திருமாவும், வைகோவும் உழன்று கொண்டிருக்கிறார்கள். இதில், பாமகவை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் திமுக இருப்பதாக சொல்லகிறார்கள்.. ஒருவேளை பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேற கூடும் என்பது வெளிப்படை.
பாமக
அதிமுக கூட்டணியை எடுத்து கொண்டால், பாமக இழுபறியில் உள்ளது.. அமமுக அதிமுகவுடன் இணையுமா? அல்லது தனித்து போட்டியிடக்கூடுமா என்று தெரியவில்லை.. எடப்பாடியார் ஒப்புக் கொண்டால், அமமுக உள்ளே வரக்கூடும்.. அல்லது தனித்து களம் காணக்கூடும்.. இதில் பாமகவும், தேமுதிகவும் பிடிவாதத்தின் உச்சத்தில் இருக்கின்றன.. பாமக உள் ஒதுக்கீடு விஷயத்தை கையில் எடுத்துள்ளது, தேமுதிக 41 சீட் என்பதிலேயே உறுதியாக இருக்கிறது.. இவை இரண்டுமே அதிமுகவால் சாத்தியமில்லை.. இது தெரிந்தும் தான் இந்த கட்சிகள் அதிமுக தலைமைக்கு அழுத்தம் தந்து கொண்டிருக்கின்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது.
பாஜக
அப்படியானால், தேமுதிக, பாமகவின் கோரிக்கைகள் ஏற்க மறுக்கும் பட்சத்தில், அமமுகவை போலவே இவைகள் கூட்டணியை விட்டு வெளியேறக்கூடும்.. ஆக, அமமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் வெளியேறினால் அவைகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது.. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. இந்த கட்சிகள் அனைத்துமே பாஜகவின் அபிமானத்தை பெற்றவை என்பதால், பாஜக தலைமையிலேயே கூட்டணி உருவாகலாம் அல்லது கமல் தலைமையில் அணி அமையக்கூடும்.
3வது அணியா?
கமலை பொறுத்தவரை, 2 சதவீதம் வாக்கு வங்கியே அவருக்கு உள்ளதால், திமுகவில் தயக்கம் காட்டப்படுகிறது.. எனவே கமலை வைத்து ஒரு அணி உருவானால் நிச்சயம் அதில் காங்கிரஸ் வந்து தன்னை இணைத்து கொள்ளக்கூடும்.. கமல் மீது ஆழமான, அதிகமான நம்பிக்கையை கேஎஸ் அழகிரி வைத்துள்ளார்.. அந்த வகையில் 3வது அணி கமல் தலைமையில் அல்லது பாஜக தலைமையில் உருவாகலாம் என்றே இப்போதைய நிலைமையை வைத்து கணிக்கப்பட்டு வருகிறது.