நீலாங்கரை வீட்டில் ரசிகர்கள் கூட்டம்! நேரு ஸ்டேடியத்திற்கு 3 மணிக்கே ரகசியமாக வந்த நடிகர் விஜய்?
சென்னை: லியோ வெற்றி விழா நடைபெறும் இடத்திற்கு நடிகர் விஜய் 3 மணிக்கே வந்து அங்கு ஒரு அறையில் ஓய்வெடுப்பதாக சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் 11ஆவது நாள் வசூல் 510 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் லியோ வெற்றி விழாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரு உள்விளையாட்டரங்கில் தயாரிப்பு நிறுவனம் அனுமதி கேட்டது.

இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து காவல் துறையும் அனுமதி அளித்துள்ளது. மொத்தம் 8000 பேர் அமரக் கூடிய அந்த அரங்கில் 6000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 5500 பேர் ரசிகர்கள், 500 பேர் விஐபிக்கள் ஆவர்.
லியோ வெற்றி விழாவில் தேவையற்ற கூட்டநெரிசலை தவிர்க்க ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பாஸ்கள் வழங்கப்பட்டன. இந்த பாஸ்களுடன் ஆதார் கார்டு, ரசிகர் உறுப்பினர் அட்டை நகல் ஆகியவை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
ஆனால் அந்த விழாவை தயாரிப்பு நிறுவனமே ரத்து செய்துவிட்டது. இதையடுத்து இன்று வெற்றி விழா என்றதும் காலை முதலே ரசிகர்கள் நேரு விளையாட்டரங்கம் முன்பு திரண்டனர். அவர்களை போலீஸார் திருப்பி அனுப்பினர், மாலை 6 மணிக்கு விழா தொடங்குவதால் மாலை 4 மணி முதல் மட்டுமே அனுமதிக்கப்படும், இப்போது கலைந்து செல்லுங்கள் என்றனர்.
தற்போது மாலை 4 மணிக்கு பாஸ் இருக்கும் ரசிகர்களுக்கு அனுமதி அளித்த போது அவர்களிடம் விஜய் மக்கள் இயக்க கொடி, பேனர், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது. பட்டாசு வெடிக்கவும் பேனர் வைக்கவும் தடைவிதிக்கப்பட்டது. விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க ஒவ்வொருவராக உள்ளே செல்கிறார்கள்.
இந்த நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது எனவே தேவையில்லாமல் விழா நடக்கும் இடத்திற்கு வந்து போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என காவல் துறை அறிவித்துள்ளது. எனினும் விஜய் விழா அரங்கிற்கு வரும் போது அவரை பார்க்க ஸ்டேடியம் வாசலில் பலர் காத்திருக்கிறார்கள்.
அது போல் விழா அரங்கிற்கு நீலாங்கரை வீட்டிலிருந்து விஜய் காரில் புறப்படும் போது அவரை பார்க்கலாம் என்பதற்காக அவர் வீட்டு முன்பும் ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கிறார்கள். ஆனால் கூட்ட நெரிசலை தவிர்க்க விரும்பிய விஜய் விழா நடைபெறும் இடத்திற்கு பிற்பகல் 3 மணிக்கே வந்துவிட்டதாகவும் சில மணி நேரம் காரில் காத்திருந்ததாகவும் பிறகு ஸ்டேடியத்தில் ஒரு அறையில் ஓய்வு எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அவர் வழக்கமாக வரும் காரில் வராமல் சாதாரணமாக மக்கள் பயன்படுத்தும் ஒரு பிரபல எஸ்யூவி வாகனத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications