அபாயம்.. தென்னிந்திய அணைகளில் 17% மட்டுமே தண்ணீர் உள்ளது.. பஞ்சம் ஏற்பட வாய்ப்பு: மத்திய அரசு தகவல்!
சென்னை: தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நம் நாட்டில் நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்து வருவதை கண் முன்னே பார்த்து வருகிறோம். எனினும், கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மழைப்பொழிவு அதிகம் இருந்து வந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. அதேசயம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் அண்மையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களில் மொத்த கொள்ளளவில் 17 சதவீதம் மட்டுமே தண்ணீர் தற்போது இருப்பதாகவும் இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய நீர்ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களை மத்திய நீர் ஆணையம் கண் காணித்து வருகிறது. தென்னிந்தியாவில் உள்ள 42 நீர்த்தேக்கங்களில் சராசரி நீர் கொள்ளளவு 53 பில்லியன் கன அடி. ஆனால் தற்போது 8.865 பில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 17 சதவீதம் மட்டுமே என மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக தென்னிந்திய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் 23 சதவீத தண்ணீர் இருந்து வந்தது. அதிலும் கடந்த 2023ஆம் ஆண்டில் அதிக மழைப்பொழிவு காரணமாக 29 சதவீத தண்ணீர் இருப்பு இருந்தது. இந்நிலையில், தற்போது 17 சதவீதம் மட்டுமே தென்னிந்திய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் மிச்சம் உள்ளது.
எனவே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள இந்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் மத்திய நீர் ஆணையம் கூறியுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டு போதிய மழை பெய்யாததால் தான் இந்த பிரச்சனை என்றும் மகாநதி, பெண்ணாறு படுகைகளுக்கு இடையே நதிகளில் நீர் வரத்து குறைந்துள்ளது என்றும் மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications