சின்ன கவுண்டர் Vs தேவர் மகன்.. குறுக்கே வரும் சித்தி! திகைக்க வைப்பாரா தினகரன்! யாருக்கு செல்வாக்கு?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மீண்டும் அரசியல் கணக்குப் புத்தகத்தின் மையப் பக்கமாக மாறியுள்ளன. கடந்த 2021 தேர்தலைவிட இம்முறை இந்தப் பகுதிகளில் வெற்றியைப் பெற திமுகவும் அதிமுகவும் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. காரணம், கடந்த முறை தென் மாவட்டங்கள் இரு கூட்டணிகளுக்கும் தந்த அனுபவங்கள். கடந்த தேர்தல்களில் ஒன்றாக இருந்த ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் இப்போது மூன்று பக்கம் நிற்கின்றனர். இதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்பது தான் பலரது கேள்வி.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலம் வரை தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாகவே இருந்தன. ஆனால், அவரின் மறைவுக்குப் பிறகு அரசியல் நிலைமைகள் மாறின.
பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 'கவுண்டர் கட்சி' என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டது. இதனால் முக்குலத்தோர், நாடார், பட்டியலினத்தோர் உள்ளிட்ட சமூகங்களின் வாக்குகள் பிற கட்சிகளுக்கு மாற்றமடைந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தென் மாவட்டங்களில் உள்ள 58 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்த சமூகங்களின் வாக்குகள் தான் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கின்றன. 2021 தேர்தலில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவுக்கு வெளியே இருந்தனர். ஓபிஎஸ் ஆதரவு வட்டமும் அப்போது நிலை குலைந்திருந்தது. இந்த சூழலில் தினகரன், எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து அதிமுக கூட்டணியின் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படுத்தினார்.
இந்த அனுபவத்தை மனதில் வைத்து, இம்முறை சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் பழனிசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இறுதியில் தினகரன் மட்டும் கூட்டணியில் இணைந்தார். இதனால் சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. சசிகலா புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்திருப்பது, வெற்றியைப் பெறுவதற்காக அல்ல; பழனிசாமியின் வெற்றியைத் தடுக்கவே என்ற அரசியல் கணக்காக பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் அமைப்புகளுடன் சந்தித்து ஆதரவைப் பெறும் முயற்சியில் அவரது தரப்பு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்கு பிளவை ஏற்படுத்துவது தான் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இதற்கிடையில், திமுகவும் தனது கணக்குகளை அமைத்துக் கொண்டிருக்கிறது. முக ஸ்டாலின் தலைமையிலான திமுக, ஓபிஎஸ்ஸை பிரச்சாரத்தில் முன்னிறுத்த திட்டமிட்டுள்ளது.
எடப்பாடியால் ஏமற்றப்பட்டேன் என்ற செய்தியை தென் மாவட்டங்களில் பரப்ப ஓபிஎஸ்ஸை பயன்படுத்தலாம் என்ற அணுகுமுறை திமுகவில் இருக்கிறது என கூறப்படுகிறது. 2016-ல் கூட்டணி இல்லை என அறிவித்த ஜெயலலிதா, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸை திருவாடானை தொகுதியில் போட்டியிட வைத்தார். அதேபோல் இம்முறை திமுகவும் கருணாஸை தனது சின்னத்தில் நிறுத்தி சமூக அடையாள அரசியலை பயன்படுத்துகிறது.
மேலும், கடந்த தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக இருந்த எஸ்டிபிஐ கட்சியையும் திமுக தனது பக்கம் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக பல சமூக அமைப்புகளை அறிவாலயத்திற்கு அழைத்து கூட்டணி ஆதரவை வெளிப்படுத்தச் செய்வதற்கான திட்டமும் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அதிமுக தரப்பில் கூட்டணி பலமும், அரசுக்கு எதிரான அதிருப்தி அலைவும் தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
மேலும், திமுக அமைச்சர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கலாம் என்ற அரசியல் சூழ்நிலையையும் அதிமுக ஒரு முக்கிய காரணி எனக் கருதுகிறது. மொத்தத்தில், தென் மாவட்டங்கள் இந்த தேர்தலில் மீண்டும் அரசியல் வெற்றியின் திறவுகோலாக மாறியுள்ளன. இதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்பது தான் பலரது கேள்வி.












Click it and Unblock the Notifications