Sabarimala: சபரிமலைக்கு ரயிலில் போறீங்களா.. தெற்கு ரயில்வே போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: ஐயப்ப சீசன் தொடங்கியுள்ள நிலையில் சபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் ரயில்வே பாதுகாப்பு விதிகளின்படி ரயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது ரயில் நிலைய வளாகத்தின் எந்த பகுதியிலும் கற்பூரம், மெழுகுவர்த்தி, விளக்குகள் ஆகியவற்றை ஏற்ற தெற்கு ரயில்வே தடை விதித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கேரள மாநிலம், சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கார்த்திகை மாதம் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மண்டல காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால், சபரிமலையில் தற்போது கூட்டம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பக்தர்கள் நெரிசலின்றி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ரயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது ரயில் நிலைய வளாகத்தின் எந்த பகுதியிலும் கற்பூரம், மெழுகுவர்த்தி, விளக்குகள் ஆகியவற்றை ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது ரயில்வே சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில், ரயில் மூலம் சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில்களுக்குள்ளோ அல்லது ரெயில் நிலைய வளாகத்திற்குள்ளோ கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ரயில் பயணத்தின் போது பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துகளைப் பாதுகாப்பதற்கே இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ரயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது தீ விபத்தை ஏற்படுத்தும். ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இதுகுறித்து சபரிமலை செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்களிடம் சென்னை கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. தடையை மீறி கற்பூரம் ஏற்றுவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை குழுக்கள் ரயில்களுக்குள்ளும், ரயில் நிலைய வளாகங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications