தீபாவளி.. சொந்த ஊர் போக குட்நியூஸ்.. நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்.. சென்னை திரும்ப இத்தனை ரயில்களா?
சென்னை: சென்னை சென்ட்ரல் திருநெல்வேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 3 முறை இயக்கப்பட உள்ள நெல்லை சிறப்பு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12-ம்தேதி (ஞாயிறு அன்று) கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நவம்பர் 8ம் தேதி முதலே செல்வார்கள். இவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஒவ்வொரு ஆண்டும் இயக்கப்படும்.

அதன்படி கூட்ட நெரிசலை சமாளிக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி சந்திப்பு இடையே எழும்பூர் வழியாக நவம்பர் 8, 15, 12 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது (06051) மறுநாள் காலை 11.45க்கு திருநெல்வேலிக்கு சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பின்னர் மறுமார்க்கமாக திருநெல்வேலி - சென்ட்ரல் இடையே (நவ.9, 16, 23) ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருநெல்வேலியில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06052) மறுநாள் அதிகாலை 3.45க்கு (எழும்பூர் வழியாகவே ) சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
இதனிடையே தீபாவளி முடிந்து தென்மாவட்டங்களிலிருந்து திரும்புவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாகர்கோவில் தாம்பரம் இடையேயும், தாம்பரம் நாகர்கோவில் இடையேயும் தலா நான்கு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் நவம்பர் 5, 12, 19, 26 தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இதேபோல்
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் நவ 6,13, 20, 27 தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிறு அன்று மாலை 4.35க்கு புறப்பட்டு, வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பாட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு தாம்பரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இறுதியாக தாம்பரத்திற்கு அதிகாலை 4.10க்கு வரும்.
இதேபோல் திங்கள்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இறுதியாக நாகர்கோவிலுக்கு இரவு 8.45க்கு சென்றடையும். நாகர்கோவில்- தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவம்பர் 2ம் தேதியே தொடங்கிவிட்டது" தெற்கு ரயில்வே இவ்வாறு தனது அறிவிப்பில் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications